விஸ்கான்சின் மாநிலத்தை இணைக்க திருநற்கருணை பவனி விஸ்கான்சின் மாநிலத்தை இணைக்க திருநற்கருணை பவனி 

விஸ்கான்சின் மாநிலத்தை இணைக்க திருநற்கருணை பவனி

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியுள்ள கொள்ளைநோய், பொருளாதாரச் சீர்குலைவு, இனப்பாகுபாடு, வன்முறை ஆகிய பிரச்சனைகளுக்கு ஆன்மீகத் தீர்வுகள் வழங்க, நற்கருணை நாதரின் பவனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில், மாடிஸன் (Madison) நகரில், இரண்டரை மாதங்களுக்கு முன் நிகழ்ந்த போராட்டங்களும், வன்முறைகளும் உருவாக்கியக் காயங்களை குணமாக்கும் வகையில், அந்நகரின் முக்கிய வீதிகள் வழியே, திருநற்கருணை பவனி அண்மையில் நடைபெற்றது.

அந்நகரில் அமைதியும், நீதியும் உருவாகவேண்டும் என்ற வேண்டுதலுடன், ஆயர் Donald Hying அவர்கள் நற்கருணை நாதரை ஏந்திச்சென்ற வேளையில், அந்த ஊர்வலத்தில், 2000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியுள்ள கொள்ளைநோய், பொருளாதாரச் சீர்குலைவு, இனப்பாகுபாடு, வன்முறை ஆகிய அனைத்திற்கும் அரசியல் தீர்வுகள் கிடைப்பது அரிதாகிவரும் வேளையில், இந்தப் பிரச்சனைகளுக்கு ஆன்மீகத் தீர்வுகள் வழங்க, நற்கருணை நாதரின் பவனியை மேற்கொண்டதாக, ஆயர் Hying அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.

பவனி நிகழ்ந்த பாதைகள் அனைத்திலும் மக்கள் மிகுந்த மரியாதையுடன் நற்கருணை நாதரை வணங்கியதைக் காணமுடிந்தது என்றும், எந்த ஓர் இடத்திலும், இந்த முயற்சிக்கு எதிர் குரல் எழவில்லை என்றும், இந்த பவனியை ஏற்பாடு செய்திருந்த அருள்பணி Rick Heilman அவர்கள் கூறினார்.

பவனி ஏற்பாடு செய்யப்பட்ட நாளன்று காலை, மழையும் காற்றும் வீசியபோதும், பவனி நிகழ்ந்த பிற்பகலில், மேகங்கள் கலைந்து, தெளிவான வானிலை நிலவியது, இறைவன் வழங்கிய ஓர் அறிகுறியாகத் தெரிந்தது என்று, அருள்பணி Heilman அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பொதுநிலையினர் இணைந்து உருவாக்கியுள்ள ‘கிறிஸ்துவின் மக்கள்’ என்ற அமைப்பு, இந்த நற்கருணைப் பவனியை, "இணைந்ததொரு விஸ்கான்சின்" என்ற மையக்கருத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர் என்று, அருள்பணி Heilman அவர்கள் கூறினார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2020, 13:25