"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." மத்தேயு 11:28 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." மத்தேயு 11:28 

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு விடுக்கும் அழைப்பை நம்பி, அவரை அணுகி, இளைப்பாறுதல் தேட, பழகிக் கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஜூலை 4, இச்சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திர நாள். தங்கள் நாடுகளில் அடக்குமுறை பிரச்சனைகளைச் சந்தித்த பல்லாயிரம் மக்கள், சுதந்திரத்தைத் தேடிச்சென்ற ஒரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கியது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, விரும்பிய மக்கள், அமெரிக்கக் கடற்கரையை நெருங்கியபோது, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திரத் தேவதையின் சிலை அவர்களை வரவேற்றது.

இச்சிலை வைக்கப்பட்டுள்ள மேடையில், கவிதையொன்று பொறிக்கப்பட்டுள்ளது. எம்மா இலாசரஸ் (Emma Lazarus) என்ற யூதப் பெண்கவிஞர் இயற்றியுள்ள அக்கவிதையின் ஒரு சில வரிகள், நமது ஞாயிறு சிந்தனையை இன்று ஆரம்பித்து வைக்கின்றன:

மின்னலைச் சிறைப்படுத்தி, சுடராக ஏந்திநிற்கும்

வலிமைமிக்க இப்பெண்ணின் பெயர், நாடுகடத்தப்பட்டோரின் அன்னை.

மௌனமான அவரது இதழ்களிலிருந்து எழும் குரல் இதுவே:

"உங்கள் நடுவே களைப்புற்று, வறுமையுற்று,

சுதந்திரத்தைச் சுவாசிக்க ஏங்கும் மக்களை எனக்குக் கொடுங்கள்.

உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற

மக்களை எனக்குக் கொடுங்கள்.

வீடற்று, புயல்சூழ்ந்த கடலில் தத்தளிக்கும்

மக்களை என்னிடம் அனுப்புங்கள்..."

இக்கவிதையில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்று, கடந்த சில ஆண்டுகளாக நம் இதயங்களில் பதிந்துவந்த துயரமான நினைவுகளை மீண்டும் கிளறிவிடுகிறது. "உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற மக்களை எனக்குக் கொடுங்கள்" என்ற சொற்களை வாசிக்கும்போது, நாடுவிட்டு நாடு செல்லும் பல்வேறு புலம்பெயர்ந்தோர், ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதையும், பல நேரங்களில் அவர்கள் பயணிக்கும் கலங்கள் கடலில் கவிழ்ந்து, அம்மக்களின் உயிரற்ற உடல்கள் கரையில் குப்பையைப் போல் ஒதுங்குவதையும் குறித்த செய்திகள் நம் உள்ளங்களை அவ்வப்போது கீறுகின்றன. குறிப்பாக, 2015ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, ஆலன் குர்தி (Alan Kurdi) என்ற 3 வயது சிறுவனின் உடல், நம் உள்ளங்களில் இன்னும் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் குப்புறப்படுத்திருக்கும் குழந்தையைப்போல், மீளா உறக்கத்தில் கிடந்த ஆலனின் சடலம், பல நாட்கள் நம்மைப் பாதித்தது.

போர், இயற்கை சீற்றங்கள் ஆகிய கொடுமைகளிலிருந்து தப்பித்து, பாதுகாப்பைத் தேடி, ஆபத்தான படகுகளில் பயணங்களை மேற்கொண்டு, இறுதியில், கடலில் மூழ்கி இறக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள் இன்றும் குப்பையென பல நாடுகளின் கரைகளில் ஒதுங்குகின்றனர். இதையொத்த ஒரு நிலையை, கோவிட் 19 கொள்ளைநோயும் உருவாக்கியுள்ளது. இந்த கொள்ளை நோய் என்ற அலையில் சிக்கி, கரைசேர வழியின்றி குப்பையென ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி மக்களையும் நினைத்துப் பார்க்க, சுதந்திர தேவதையைப் பற்றிய கவிதை நம்மைத் தூண்டுகிறது.

சுதந்திர தேவதையின் மேடையில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், இன்று நாம் கேட்கும் நற்செய்தியின் எதிரொலியாக அமைந்துள்ளன. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11: 28) என்று இயேசு விடுக்கும் அழைப்பு, அன்றும், இன்றும், என்றும் பொருளுள்ளதாக, ஆறுதல் அளிப்பதாக விளங்குகிறது:

காயப்பட்டக் கடவுளை நமக்கு அடையாளம் காட்டும் விழாவான, இயேசுவின் தூய்மைமிகு உடல், மற்றும் இரத்தத் திருவிழாவை இரு வாரங்களுக்கு முன் சிறப்பித்தோம். அவ்விழாவைத் தொடர்ந்து வந்த வெள்ளியன்று, காயப்பட்ட அந்த இறைவன், ஈட்டியால் குத்தப்பட்ட தன் இதயத்தை நமக்கு வெளிப்படுத்திய விழாவாக, இயேசுவின் தூய்மைமிகு இதயப் பெருவிழாவையும் நாம் சிறப்பித்தோம். அப்பெருவிழாவன்று வழங்கப்பட்ட நற்செய்தி, இஞ்ஞாயிறன்று மீண்டும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவிலியத்தின் ஒரு சில கூற்றுகள், எத்தனை முறை ஒலித்தாலும், அவை பொருளுள்ள வார்த்தைகளாக இருக்கும். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.” (மத்தேயு 11: 28) என்று, இயேசுவின் இதயத்திலிருந்து வரும் பொருள்செறிந்த இவ்வழைப்பு, இத்தனை நூற்றாண்டுகளாக பலகோடி மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் வழங்கி வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.

கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவதை, மென்மையான ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும், எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், நாம் நினைப்பதால், இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். நாம் வாழ்வில் சந்திக்கும் சுமைகளைச் சமாளிக்க, பல அறிவுப்பூர்வமான வழிகளை நாம் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இந்தத் தயக்கம் நமக்குள் உருவாகிறது.

நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். அது, இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசுவின் வார்த்தைகளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். வயதில் வளர்ந்துவிட்டதால், இவ்வுலக வழிகளை கற்றுக்கொண்டதால், நாம் இயேசு கூறும் வழிகளிலிருந்து விலகிச் செல்வதை, அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக, இவ்வுலகம், பல குறுக்கு வழிகளைக் காட்டுகிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது.

கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறையைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார் அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில், பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன், இப்படி அனைத்து கோழிகளும் அநியாயமாய் இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.

வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகம், பிரச்சனைகளை எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தைச் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால், பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்" என்றோ, கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்! அவற்றால் எத்தனை முறை பாதிக்கப்பட்டிருக்கிறோம்!

இதற்கு நேர்மாறாக, இயேசு கூறுவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரும் வாக்குறுதி.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் மற்றோர் உருவகம் மிக ஆழமான, அர்த்தமுள்ள உருவகம். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது, இயேசு விடுக்கும் அடுத்த அழைப்பு.

இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதற்குப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம்.

கலிலேயா பகுதியில், நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று, புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், வில்லியம் பார்க்லே (William Barclay) அவர்கள் கூறியுள்ளார். பார்க்லே அவர்கள் இந்த வரிகளையொட்டி சித்திரிக்கும் கற்பனை காட்சி, அழகானது. நாசரேத்தில், இயேசு வேலை செய்துவந்த தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், "உங்கள் தோள்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே காணப்படும் என்று, பார்க்லே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை, இரு கோணங்களில் சிந்திக்கலாம். ஒன்று, இயேசு தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்துதருவார். அதாவது, நம்மை அழுத்தி வதைக்காத நுகத்தையே அவர் நம் தோள் மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை; அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; தன் நுகத்தில் நம்மையும் இணைப்பதற்கு அழைக்கிறார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அவரோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்துகிறார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க இயேசு கூறும் தீர்வுகள்.

சுமைகளைச் சுமப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், இச்சுமைகளை புரிந்துகொள்ளும் தெளிவு நமக்கு வேண்டும். தேவையான சுமைகளை நாம் சுமப்பதில் தவறில்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான, தேவையற்ற சுமைகளை இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று முதலில் மன்றாடுவோம்.

வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இறைவனும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும் இறைவன் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றும் மன்றாடுவோம்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளை இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேட, பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு, எளிதான, விரைவான, தவறான குறுக்குவழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களின் பொய்மைகளை புரிந்துகொள்ளத் தேவையான உள்ளொளியையும், உறுதியையும், இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.

கோவிட் 19 கொள்ளைநோய் நம்மீது சுமத்தியுள்ள சுமைகளைக் குறித்த சரியான புரிதலை இறைவன் வழங்கவேண்டும் என்று ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம். இந்தக் கொள்ளைநோயினால், எதிர்காலத்தைக் குறித்த பல்வேறு கேள்விகளுடன் போராடிவரும் இளையோர், நம்பிக்கையோடு இறைவனை நாடிச்சென்று, அவரிடம் தங்கள் சுமைகளை இறக்கிவைக்கவும், தங்கள் எதிர்காலம் என்ற நுகத்தை, இயேசுவுடன் இணைந்து, நம்பிக்கையோடு சுமக்கவும் கற்றுக்கொள்வார்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2020, 10:58