லெபனானில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
லெபனான் நாட்டில் ஒப்புரவை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்ட தேசிய அளவிலான Baabda கூட்டம் தோல்வியடைந்ததற்கு, முறையான தயாரிப்பு ஏற்பாடுகள் இன்மையே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார் கர்தினால் Beshara Raï.
தேசிய ஒப்புரவிற்காக லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun அவர்களால் அழைப்பு விடப்பட்டிருந்தக் கூட்டத்தில், Sunni இஸ்லாமியர்களும், எதிர்க்கட்சி கிறிஸ்தவர்களும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது, சரியான தயாரிப்புகள் இன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று கூறிய, மாரனைட் வழிபாட்டுமுறைத் தலைவர் கர்தினால் Beshara Raï அவர்கள், ஒப்புரவை மனதில்கொண்டு கூட்டப்பட்ட ஒரு கூட்டம், மேலும் பிரிவினைகளுக்கு வழிவகுத்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.
லெபனான் சமுதாயத்தை, பசி, வறுமை, மற்றும், பற்றாக்குறைகளிலிருந்து காக்கும் நோக்கத்துடன் அனைத்து சமுதாயங்களையும் இணைத்து விவாதிக்க ஏற்பாடுச் செய்யப்பட்ட கூட்டம், சரியான தயாரிப்புகள் இன்மையால், நாட்டிற்குள் அரசியல் பிரிவினைகள் வளர காரணமாகிவிட்டது என மேலும் கூறினார் கர்தினால் ராய்.
மேலும், லெபனானில் பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரின் கருத்துச் சுதந்திரத்தின் மீது நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்ட கர்தினால் ராய் அவர்கள், ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் Hezbollah குழுவுக்கு எதிராக அமெரிக்க தூதர் Dorothy Shea அவர்கள் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து, Shiite மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட Tire நகரின் நீதிமன்றம், ஓராண்டிற்கு சமூகத்தொடர்பு சாதனங்கள் அமெரிக்கத் தூதரை பேட்டி காணக்கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கூறினார்.
லெபனான் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தீர்ப்பு, லெபனான் நீதித்துறைமீது களங்கத்தை விதைப்பதுடன், அரசியலமைப்பிற்கும் எதிராகச் செல்கிறது என கவலையை வெளியிட்டார் கர்தினால் ராய். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்