கோவிட்-19 நெருக்கடி நிலையில் தமிழகம் கோவிட்-19 நெருக்கடி நிலையில் தமிழகம்  

தமிழக ஆயர்கள்: உதவிக்கரம் நீட்டுவோம்

தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும், தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி சொல்வோம் - பேராயர் அந்தோனி பாப்புசாமி

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி சூழலில், புனித வாரத்தில் நுழையும் தருவாயில் உள்ள நாம், உணவு மற்றும், அத்தியாவசியத் தேவைகளின்றி துன்புறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என்று, தமிழக ஆயர் பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவலையடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ள, தமிழக ஆயர் பேரவைத் தலைவரான மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், ஏற்கனவே தமிழக பல்நோக்கு சேவா சங்கம், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பல உதவிப் பணிகளை ஆற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

பல மறைமாவட்டங்களும், தங்களது எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும், ஏழைகளின் பசி தீர்த்து அவர்களுக்குத் தங்குமிடங்களையும் கொடுத்து வருகிறது என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்படின், அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கிறபோது, நம்மிடமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மக்கள் மன்றங்கள் போன்றவற்றை பயன்பாட்டிற்குக் கொடுத்து உதவுவோம் என்று கூறியுள்ள மதுரைப் பேராயர் அந்தோனி அவர்கள், நல் உள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள், தமிழ்நாடு பல்நோக்கு சேவா சங்க இயக்குனருக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Account name: TASOSS General Fund

A/C Number : 831310100001675

Bank Address : Bank of India, Cantonment Branch, Trichy – 620 001

Branch code: 8313

RTGS/IFSC Code: BKID0008313 

தமிழ்நாடு பல்நோக்கு சேவா சங்கம், தற்போது மேற்கொள்ளும் நல உதவிப் பணிகளுக்கு, இத்தொகை பயன்படுத்தப்படும். ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் உதவி தேவைப்பட்டால், தமிழ்நாடு பல்நோக்கு சேவா சங்க இயக்குனரைத் தொடர்புகொள்ளுமாறும் பேராயர் கூறியுள்ளார்.

மருத்துவ நலப்பணியாளர்களுக்கு நன்றி

தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும், தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி சொல்வோம் என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமி, இந்தியாவிலும், நம் தமிழகத்திலும் பரவியுள்ள இச்சூழலில், இடர்பாடுகள் நிறைந்த இக்காலக் கட்டத்தில், மக்களின் அச்சத்தை நீக்கி, நம்பிக்கையுடன் வாழ ஊக்கம் அளித்து வருகிறவர்கள் மற்றும், மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றிவரும் எல்லாரையும் பாராட்டுகிறேன்  என்றும், பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் புனித வாரம் நம்மைத் தூய்மைப்படுத்தட்டும், பாவங்களும் தீமைகளும் மறைந்து, புது விடியலும், புது வாழ்வும் பிறக்கட்டும் என்று, தன் அறிக்கையை நிறைவு செய்துள்ளார், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி. (Indian Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2020, 14:29