திருத்தந்தையின் இதயத்தில் இடம்பிடித்த பெர்கமோ
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இத்தாலி நாட்டின் பெர்கமோ (Bergamo) பகுதி, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதி மக்களோடு தன் ஒருமைப்பாட்டை உணர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பகுதியின் ஆயர் பிரான்செஸ்கோ பெஸ்கி அவர்களை தொலைப்பேசி வழியே தொடர்புகொண்டார்.
புனித 23ம் யோவான் அவர்களின் பிறப்பிடமான பெர்கமோ பகுதியில் நிகழ்ந்துள்ள மரணங்கள் குறித்து, திருத்தந்தை மிகுந்த கவலையோடும், கனிவோடும் தன்னோடு பேசியபோது, புனிதத் திருத்தந்தை 23ம் யோவான் அவர்களின் அரவணைக்கும் குரலின் எதிரொலியைக் கேட்கமுடிந்தது என்று, ஆயர் பெஸ்கி அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் நோயுற்றோருக்கென ஆற்றிவரும் அற்புத பணிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தொலைப்பேசி அழைப்பில் சிறப்பாகக் குறிப்பிட்டார் என்று கூறிய ஆயர் பெஸ்கி அவர்கள், அப்பகுதியில் இறந்துள்ளவர்களை, குறிப்பாக, இறையடி சேர்ந்த அருள்பணியாளர்களை தன் செபங்களில் நினைவுக்கூர்வதாக திருத்தந்தை கூறியதையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்