லூர்து நகரில் அன்னை மரியா காட்சியளித்த கெபி லூர்து நகரில் அன்னை மரியா காட்சியளித்த கெபி 

கோவிட்-19ஆல் லூர்து அன்னை திருத்தலம் மூடப்படுகிறது

லூர்து அன்னை திருத்தலம் அதன் வரலாற்றில் முதன்முறையாக மூடப்படுகின்றது. மேலும், லூர்து நகரில் அன்னை மரியா காட்சியளித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கெபியில் அருள்பணியாளர்கள் தனியாகத் திருப்பலி நிறைவேற்றுவார்கள். அதனை நேரடி ஒளிபரப்பில் காணலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமியின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னை திருத்தலம், வரலாற்றில் முதன்முறையாக மூடப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இத்தொற்றுக்கிருமி வேகமாகப் பரவி வருவதைத் தடைசெய்யும் நோக்கத்தில், லூர்து அன்னைத் திருத்தலத்திலுள்ள குணமளிக்கும் குளம் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்திருத்தலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்படுவதாக மார்ச் 17, இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஒத்திணங்கும் முறையில், இத்திருத்தலமும் மூடப்படுவதாக, அத்திருத்தல அதிபர் அருள்பணி Olivier Ribadeau Dumas அவர்கள் அறிவித்துள்ளார்.

அருள்பணி Dumas அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இத்திருத்தல வரலாற்றில் முதன்முறையாக இது மூடப்படுகின்றது. மேலும், இத்திருத்தல இணையதளப் பக்கத்தின் வழியாகச் செபியுங்கள்” என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2020, 14:53