தேடுதல்

இயேசு சிலுவையில் சொன்ன இறுதி ஏழு வாக்கியங்களில் ஒன்று, "தாகமாயிருக்கிறது" இயேசு சிலுவையில் சொன்ன இறுதி ஏழு வாக்கியங்களில் ஒன்று, "தாகமாயிருக்கிறது" 

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 6

உலகம் சொல்லித்தரும் தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய துணிவை நாம் பெறவேண்டும். அந்தத் துணிவை, சிலுவையில், தாகமாய் இருந்த இயேசு, நமக்குத் தர வேண்டும் என்று செபிப்போம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 6

இயேசு சிலுவையில் சொன்ன இறுதி ஏழு வாக்கியங்களில், அவர் கூறிய, "தாகமாயிருக்கிறது" என்ற கூற்றை, இன்றைய விவிலியத்தேடலின் மையமாக்குவோம்.

கல்வாரியில் நிகழ்ந்ததாய் நான்கு நற்செய்திகளும் பதிவு செய்துள்ள கூற்றுகளைச் இணைத்துப்பார்த்தால், இயேசுவுக்கு, கல்வாரியில், பானங்கள், இருமுறை கொடுக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளலாம். முதல்முறை, இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை, அவர் குடிக்க மறுத்தார். இரண்டாம் முறை, அவரே, தன் தாகத்தை எடுத்துச்சொன்னார்.

பாரமானச் சிலுவையைச் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து, விழுந்து, எழுந்து வந்த இயேசு, கல்வாரியை அடைந்ததும், அவருக்கு, பானம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் ஒரு சில வேறுபாடுகளுடன் கூறப்பட்டுள்ளது:

மத்தேயு 27:33-34

'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

இந்நிகழ்வைக் கூறும் நற்செய்தியாளர் மாற்கு, இயேசுவுக்கு "வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசம்" கொடுக்கப்பட்டது என்றும், அதை இயேசு குடிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். (காண்க - மாற்கு 15:22-23)

கசப்பு கலந்த, அல்லது, வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தை இயேசு குடிக்க விரும்பவில்லை. காரணம்?... அந்த இரசம், அதிக குடிபோதையைத் தரும்; வழக்கமாய் அந்தப் பானம், உடல் வலியை மறக்கக் குடிக்கப்படும். இயேசு அடைந்த வேதனையைப் பார்த்து உரோமைய வீரர்களுக்கே இரக்கம் பிறந்திருக்க வேண்டும். அவர் வலியைக் குறைக்க, அந்த வலியை அவர் மறக்க உதவும் எண்ணத்துடன், அந்த இரசத்தை வீர்ர்கள் கொடுத்தனர். இயேசு அதை மறுத்தார். தான் ஏற்றுக்கொண்ட துன்பத்தை, இறுதிவரை, முழுமையாக நிறைவேற்றும் எண்ணம் இயேசுவுக்கு.

துன்பத்தை உவந்து ஏற்கும் கடவுளைப்பற்றி சிந்திக்கலாம். வேதனையுறும் கடவுள், வலியில் துடிக்கும் கடவுள்... என்ற சொற்றொடர்களை எண்ணிப்பார்க்கவே தயங்குகிறோம். பழைய ஏற்பாட்டில், கடவுளின் துன்புறும் ஊழியனைப்பற்றி இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது:

எசாயா 53: 4-8

மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.... நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

இறைவாக்கினர் எசாயாவின் இச்சொற்கள் இயேசுவை முன்னறிவித்த சொற்கள் என்று கூறுகிறோம். கடவுளின் ஊழியன் துன்பப்படலாம், கடவுளே துன்பப்படலாமா? படலாம். துன்பத்தை, எதிர்மறையான, குறையுள்ள ஒரு கூறாகப் பார்ப்பதால்தான் கடவுளோடு அதைத் தொடர்புபடுத்தத் தயங்குகிறோம். ஆனால், துன்பத்தை, நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்த்தால், அதன் பயனை உணர்ந்தால், துன்புறும் கடவுளையும் புரிந்து கொள்ளமுடியும்.

வலியின்றி குழந்தை பெறுவதற்கு பல வழிகள் உள்ளபோதும், வலியோடு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயைக் கேட்டால், துன்பத்திற்கு அர்த்தம் உண்டு என்று சொல்வார். ஒவ்வொருவரின் வாழ்விலும், எதையாவது, வெற்றிகரமாக முடிக்கும்போது, அந்தச் சாதனைக்குப் பின்னணியாக இருந்த முயற்சிகள், துன்பங்கள் அர்த்தமுள்ளவை என்பது புரியும். முயற்சியும், துன்பமும் இல்லாமல் வரும் வெற்றி, இலவசமாகக் கிடைத்த, அல்லது இலாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை போல இருக்கும்.

பல நேரங்களில் வாழ்வில் எவ்வளவு துன்பப்பட்டாலும், வெற்றிகள் வராது. துன்பம் ஒன்றையே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும். அத்துன்பங்களைப் புரிந்துகொள்ள, துன்புறும் கடவுள் என்ற எண்ணம், நமக்கு உதவியாக இருக்கும். துன்புறும் கடவுள் ஒருவர் இருப்பதாலேயே, நம் துன்பங்களுக்கு நாம் அர்த்தம் தேடிக்கொள்ள முடிகிறது. இல்லையெனில், துன்பத்தில் நொறுங்கி, உருக்குலைந்து, அனைவரும் நம்பிக்கை இழந்து, அலைந்து கொண்டிருப்போம்.

வலியை மறக்க கொடுக்கப்பட்ட திராட்சை இரசத்தை மறுத்த இயேசுவின் உறுதி, துன்புறும் பல கோடி மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று பெருமைப்படுகிறோம். அதே நேரம், வலியை மறக்க, மனித குலம் மேற்கொள்ளும் பல முயற்சிகளை எண்ணி கவலையும் பட வேண்டியிருக்கிறது.

தினமும் மிகக் கடினமான உடல் உழைப்பை மேற்கொள்ளும் பலரை, இந்நேரத்தில் நாம் நினைத்துப்பார்க்கலாம். நாள் முழுவதும் உடலை வருத்தி, கசக்கிப் பிழியும் வேலைகளை மேற்கொள்பவர்கள், கோடிக்கணக்கான ஏழைகள். மாலையானதும், கையில் அன்றையக் கூலி கிடைத்ததும், தங்கள் உடல் வலிகளை மறக்க, அவர்களில் ஒரு சிலர் தேடிச்செல்வது சாராயம். இந்தியாவின் பெருநகரங்களில், சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அந்தப் பணியில் இறங்கும் முன் சாராயம் குடிப்பதையும் பார்த்திருப்பீர்கள். தாங்கள் இறங்கிப் பணி செய்யும் அந்தச் சூழலுக்கு மரத்துப் போகும்படி அவர்கள் சாராயத்தைக் குடிக்க வேண்டியுள்ளது.

பணிச்சூழல் மரத்துப் போனதுபோல் தோன்றினாலும், பணிமுடிந்து உடல் வலி தீர்ந்தது போல் தோன்றினாலும், அவர்கள் பருகும் சாராயத்தின் பின் விளைவாக, அவர்கள் உடல் நலத்தில் ஏற்படும் விபரீதங்கள், குடும்பங்களில் ஏற்படும் வேதனைகள் என்று, பட்டியல் நீண்டுவிடும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்களது இந்த சாராயத் தாகம் கண்டனத்திற்குரியதாய் நமக்குத் தோன்றும். கண்டனத்திற்கு பதில், கருணையுள்ள புரிந்துகொள்ளுதல் நமக்குத் தேவை.

கண்டனத்திற்குரியவர்கள் இவர்கள் அல்ல. இந்த ஏழைகளின் உடல் வேதனையை மூலதனமாக்கி, சாராயம் காய்ச்சும், அதுவும் தவறான வகையில், கீழ்த்தரமான சாராயம் காய்ச்சும் சாராய மன்னர்களும், மந்திரிகளும் கண்டனத்திற்குரியவர்கள். இந்தத் தரக்குறைவான சாராயத்தைக் குடித்து உயிர் இழப்பவர்கள், பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறதேயொழிய, குறைவதாகத் தெரியவில்லை. அதேபோல், இந்த ஏழைகளின் குடும்ப வேதனைகளை மூலதனமாக்கி, வட்டிக்குக் கடன் கொடுத்து இந்த ஏழைகளை உயிரோடு விழுங்கும் சுறாமீன்களும் கண்டனத்திற்குரியவர்கள்.

தன் உடல் வலிகளை மறக்க அளிக்கப்பட்ட மதுவை குடிக்க மறுத்த இயேசு, குடிப் பழக்கத்தின், சாராய தாகத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஏழைகளின் வாழ்விலும் குறுக்கிட்டு உடல் வேதனைகளைச் சமாளிக்கத் தேவையான மன வலிமையையும், அந்த வேதனைகளிலிருந்து மீள்வதற்கான நல் வழிகளையும், அவர்களுக்குக்  காட்டவேண்டும் என செபிப்போம்.

முதல் முறை கொடுக்கப்பட்ட மதுவை மறுத்தார் இயேசு. இம்முறை “தாகமாய் இருக்கிறது” என்று விண்ணப்பித்தார். அந்நிகழ்வை யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.

யோவான் 19: 28-29

இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே, இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறைய, புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அதை, அவர்கள், அவரது வாயில் வைத்தார்கள்.

இறை மகனுக்கு உண்டான தாகம் மனித குலம் அனுபவிக்கும் தாகங்களை, அவற்றை நாம் தீர்த்துக்கொள்ளும் வழிகளைச் சிந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளது.

இயேசு சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்களில், 'தாகமாய் இருக்கிறது' என்ற இவ்வாக்கியமே, மிகவும் குறுகியது. அதே வேளை, ஏனைய வாக்கியங்களைவிட, இந்த வாக்கியமே, இயேசுவின் மனித இயல்பை வெளிக்கொணர்ந்த வாக்கியமாக உள்ளது என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வுலகின் பெரும் பகுதியை, கடல், நதி, ஏரி, குளம் என்று தண்ணீராலும், உலகைச் சுற்றியுள்ள விண்வெளியை, நீர்த்துளிகளாலும் நிறைத்துள்ள இறைவன், சிலுவையில், தாகத்தால் துடிப்பதைக் காணும்போது, அவர், எவ்வளவு தூரம் நம்மில் ஒருவராகக் கலந்திருந்தார் என்பதை உணர்கிறோம்.

'தாகமாய் இருக்கிறது' என்று கூறிய இயேசுவுக்கு, 'புளித்த திராட்சை இரசம்' வழங்கப்பட்டது. இந்த இரசத்தைக் குறித்து, Clair Sauer என்ற விவிலிய விரிவுரையாளர் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:

இயேசு ஆற்றிய முதல் புதுமை நினைவில் உள்ளதா? கானா திருமண விருந்தில் தண்ணீரிலிருந்து உயர்ந்த தரமான திராட்சை இரசத்தை இயேசு உருவாக்கினார் (காண்க - யோவான் 2:11). தன் பணிவாழ்வின் துவக்கத்தில், சுவைமிகுந்த திராட்சை இரசத்தை வழங்கிய இயேசுவுக்கு, அவரது பணிவாழ்வின் இறுதியில், 'புளித்த திராட்சை இரசம்' வழங்கப்பட்டது.

தாகத்தில் துடிக்கும் இயேசுவைப்பற்றி தியானிக்கும்போது, நமக்கு உருவாகும் தாகங்களையும், அவற்றைத் தணிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். தாகங்களை வெல்வதற்கு, அப்படி வெல்லமுடியாத தாகங்களைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்வதே வாழக்கைக்குத் தேவையான, பயனுள்ள பாடங்கள். வியாபார உலகம், விளம்பர உலகம் கற்றுத்தரும் பாடங்கள் முற்றிலும் வேறுபட்டவை. தாகத்தை வெல்வதற்குப்பதில், எவ்வழியிலாவது, அத்தாகத்தை தணித்துக்கொள்வதற்கு, இவ்வுலகம், பல குறுக்கு வழிகளைச் சொல்லித் தருகிறது.

இந்த உலகம் சொல்லும் தாகம் வெறும் உடல் தாகம் அல்ல. மாறாக, நம்மில் தோன்றும் பலவகைத் தாகங்கள். பொருளுக்கு, பதவிக்கு, செல்வத்திற்கு, பெருமைக்கு, அழகுக்கு, ஆசைகளுக்கு... என்று, பலவகைகளிலும் நம்மில் எழும் தாகங்களுக்குக் கீழ்ப்படியச் சொல்கிறது இந்த உலகம். இந்தத் தாகங்களைத் தீர்க்க போட்டிகள் எழலாம். அந்தப் போட்டிகளில் பல கழுத்தறுக்கும் போட்டிகளாகவும் மாறலாம். அந்தக் கழுத்தறுப்பில் சிந்தும் இரத்தத்தைக் குடித்தும், நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன, இந்த உலகத்தில்.

இப்படிப்பட்ட தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய துணிவை நாம் பெறவேண்டும். அந்தத் துணிவு, இறுதியில், நம்மைச் சிலுவையில் கொண்டுபோய் நிறுத்தினாலும், அந்தச் சிலுவையிலும், மன உறுதியுடன் நிற்கவேண்டும். அத்தகையத் துணிவை, கல்வாரியில், சிலுவையில், தாகமாய் இருந்த வீரத் திருமகன் இயேசு, நமக்குத் தர வேண்டும் என்று, செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2020, 15:31