பேராயர் Pierbattista Pizzaballa பேராயர் Pierbattista Pizzaballa  

கோவிட்-19, மனிதரின் வரையறைகளைச் சுட்டிக்காட்டுகின்றது

நாம் எல்லாரும் படைப்புகள், படைத்தவரும் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தி, அவரை நோக்கி நம் பார்வையைத் திருப்ப வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி, மனிதரின் வரையறைகள் பற்றி நினைவுபடுத்துகின்றது என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி, பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள் கூறினார்.

கோவிட்-19 நெருக்கடிநிலை குறித்து ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த பேராயர் Pizzaballa அவர்கள், ஒரு சிறிய கிருமி, நம் முழு அமைப்பையும் கட்டுப்படுத்தி, நம் தலைவிதிக்கு நாம் தலைவர்கள் அல்ல என்பதை உணர்த்தியுள்ளது என்று கூறினார்.

புனித பூமித் திருஅவையையும், இக்கிருமி பாதித்துள்ளது என்றும் கூறிய பேராயர் Pizzaballa அவர்கள், தற்போதைய தன்னிலையிழந்த உணர்வு, நம் வாழ்வின் மிக உண்மையான மற்றும், ஆழமான ஒன்று பற்றி வியப்படையும் ஆவலை, நம்மில் தட்டி எழுப்பியுள்ளது என்று கூறினார்.

இந்த தொற்றுக்கிருமி, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிப்பு நடைபெறும் இத்தவக்காலத்தில் அவரின் நிலத்தையும் தாக்கியுள்ளது என்றும், எருசலேமின் புனிதக் கல்லறை, திருப்பயணிகள் இன்றி, வழிபாடுகளுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது என்றும், கூறினார், பேராயர் Pizzaballa.

நாம் எல்லாரும் படைப்புகள்,  படைத்தவரும் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தி, நாம் அவரை நோக்கி நம் பார்வையைத் திருப்ப வேண்டும் என்றும், கோவிட்-19 நெருக்கடிநிலை, கடவுளைத் தேட வேண்டும் என்ற ஆவலை உருவாக்கியுள்ளது என்றும், குடும்பங்களுக்கு அருள்பணியாளர்களின் மறைப்பணிகள் தேவைப்படுகின்றன என்றும் பேராயர் கூறினார்.

இவ்வேளையில், உறவுகளை மறுபரிசீலனை செய்து, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Pizzaballa அவர்கள் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2020, 15:35