இந்திய காரித்தாசின் தவக்கால நடவடிக்கை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக, தவக்காலத்தின் நாற்பது நாள்களும், இறைவேண்டல், தவம், உணவுக்கட்டுப்பாடு, மற்றும், இரக்கச் செயல்களில் தங்களை ஈடுபடுத்துமாறு, இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிப்ரவரி 26, இப்புதனன்று தொடங்கியுள்ள தவக்காலத்தில், நீடித்த நிலையான வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொடுத்தல் என்ற தலைப்பில், புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது, காரித்தாஸ் அமைப்பு.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாசின் இத்தவக்கால நடவடிக்கையை, இந்திய திருப்பீட தூதர் பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ (Giambattista Diquattro) அவர்கள், பிப்ரவரி 23, கடந்த ஞாயிறன்று, டெல்லி திருஇதய பேராலயத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இந்த தனது முயற்சியில் அனைவரும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, ஒவ்வொருவரும், யாராவது ஒருவருக்கு உதவிபுரிவதன் வழியாக, எல்லாரும் நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை எட்ட முடியும் என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த தலைப்பை எடுத்திருப்பதன் நோக்கம் பற்றி வத்திக்கான் வானொலியில் விளக்கிய, காரித்தாஸ் அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் அருள்பணி Paul Moonjely அவர்கள், தற்போது இந்தியா அனுபவிக்கும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, அடிக்கடி இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றை மனதிற்கொண்டு, இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்