ஈராக் திருஅவையின் வரலாறு, குருதியில் எழுதப்பட்டது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
ஈராக் திருஅவையின் வரலாறு, குருதியில் எழுதப்பட்ட வரலாறு என்று, அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும்தந்தை கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் அரசால், மொசூல் ஆயர் Paul Faraj Rahho அவர்கள் கடத்தப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்ட ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசியச் செய்திக்கு தன் சிந்தனைகளை எழுதியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை, பழங்காலத்திலிருந்தே தன் வழியை சிலுவையிலே கண்டுள்ளது என்றும், மறைசாட்சிகள் அனைவரும், நம் எல்லாருக்கும் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் என்று கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள் சிந்தியுள்ள இரத்தத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரை மதிக்கவும், அமைதியில் வாழவும், கடந்த காலத்திலிருந்து பாடம் கற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள கர்தினால், மறைசாட்சிகளின் இரத்தம், நம் கிறிஸ்தவ சமுதாயங்களின் வளர்ச்சிக்கு புதிய வாழ்வு இரத்தமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2003ம் ஆண்டில் ஈராக் அரசு வீழ்ந்ததையடுத்து, ஈராக் திருஅவை அல்கெய்தா இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கரங்களில் இருந்து, மறைசாட்சிகளை அதிகம் பெற்றிருக்கின்றது என்றும், ஈராக் திருஅவை, மறைசாட்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்