கென்யா நாட்டின் தவக்கால முயற்சிகள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வாண்டு, பிப்ரவரி 26, சாம்பல் புதனன்று துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு, "மாற்றமடைந்த நாட்டை உருவாக்கும் பொறுப்பு... என் கடமை" என்ற தலைப்பில், தவக்கால முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, கென்யா நாட்டின் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இறைவன் படைத்த இவ்வுலகும், அதில் அடங்கியுள்ள அனைத்தும் நல்லவையே என்பதை நம்புகிறோம் என்றும், இந்தப் படைப்பைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த தவக்கால முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஆயர் John Oballa Owaa அவர்கள் ஃபீதேஸ் செய்தியிடம் கூறினார்.
நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும், படைப்புக்களும் இறைவனுக்குச் சொந்தமானவை, எனவே, இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, படைப்பை ஆட்சி செய்து, அதை, தங்கள் விருப்பப்படி நடத்துவதற்கு அல்ல என்று, ஆயர் Oballa Owaa அவர்கள் எடுத்துரைத்தார்.
பொறுப்புள்ள வேளாண்மை, இளையோரும் முன்னேற்றமும், ஆகிய கருத்துக்கள் உட்பட, தவக்காலத்தின் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு மையக்கருத்து வழங்கப்பட்டுள்ளது என்று, கென்ய ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
இவ்வாண்டு மேற்கொள்ளப்படும் தவக்கால முயற்சிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலுக்கு கென்ய தலத்திருஅவை வழங்கும் பதிலிறுப்பு என்று ஆயர் Oballa Owaa அவர்கள், ஃபீதேஸ் செய்தியிடம் கூறினார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்