Aid to the Church in Need வெளியிட்ட அறிக்கையில், உலகில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாடுகள் Aid to the Church in Need வெளியிட்ட அறிக்கையில், உலகில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாடுகள் 

20 நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கெதிரான அடக்குமுறைகள்

இஸ்லாமிய தீவிரவாதம், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும், கிழக்கு ஆசியாவில் பரவி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இன்று உலகில் ஏறத்தாழ முப்பது கோடி கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று, தேவையில் இருப்போர்க்கு உதவும், பாப்பிறை பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

2017ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை, உலகில் இடம்பெற்ற, கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றி ஆய்வுசெய்து, சமய சுதந்திரம் என்ற தலைப்பில், அக்டோபர் 24, இவ்வியாழனன்று, உரோம் நகரில் வெளியிட்ட அறிக்கையில், Aid to the Church in Need (ACN) என்ற பாப்பிறை அமைப்பு, இவ்வாறு கூறியுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும், கிழக்கு ஆசியாவில் பரவி வருகிறது என்றும், இந்நாடுகளில், கிறிஸ்தவர்கள் மற்றும், ஏனைய சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா உட்பட இருபது நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளதாகக் கூறும் அந்த அமைப்பு, ஆப்ரிக்காவில் பரவிவரும் புதிய இஸ்லாமியத் தீவிரவாதத்தால், 2019ம் ஆண்டில் 18 அருள்பணியாளர்களும், ஓர் அருள்சகோதரியும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியது.

உலகில் சமய குழுக்களுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவர்களுக்கு, வட கொரியா மிகவும் ஆபத்தான நாடாக உள்ளது எனவும், அந்நாட்டில் எழுபதாயிரம் கிறிஸ்தவர்கள், தொழில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்த ஆய்வு கூறுகிறது.

2019ம் ஆண்டு உயிரப்புப் பெருவிழா நாளில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ். இஸ்லாமிய அரசே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும், பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றச்சாட்டின் பேரில், இன்னும் 25 கிறிஸ்தவர்கள் சிறையில் உள்ளனர், இவர்களில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. (ACN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2019, 15:37