இராணுவ ஆட்சியின் கொடுமைகளை ஒருபோதும் மறவாதீர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குமுன் விதிக்கப்பட்டிருந்த இராணுவச் சட்ட சர்வாதிகார ஆட்சியின் கொடூரங்களை ஒருபோதும் மறவாதீர்கள் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி பெர்டினான்டு மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralin Marcos) அவர்கள், இராணுவ ஆட்சியைக் கொண்டுவந்ததன் 47ம் ஆண்டு நிறைவை, இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்த ஆயர்கள், அந்த ஆட்சியின் இருளான நேரங்கள், மக்களுக்கு, குறிப்பாக, இளையோர்க்கு நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த இராணுவயின் ஆட்சியின் கொடூரங்கள் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்திய Balanga ஆயர் Ruperto Santos அவர்கள், கடந்தகாலப் பாடங்களிலிருந்து விழிப்புணர்வு பெற்று, சர்வாதிகார ஆட்சி திரும்புவதை, கத்தோலிக்கர் எதிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் அமலிலிருந்த இராணுவ ஆட்சியில், குறைந்தது எழுபதாயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர், 34 ஆயிரம் பேர் சித்ரவதைப்படுத்தப்பட்டனர், மற்றும், 3,240 பேர் கொல்லப்பட்டனர் என்று, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும், பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. (UCAN)
1965ம் ஆண்டு முதல், 1986ம் ஆண்டு வரை பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவராக, சர்வாதிகார ஆட்சி செய்த மார்க்கோஸ் அவர்கள், 1972ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5.17 மணிக்கு, நாடெங்கும் இராணுவ ஆட்சி சட்டத்தை அறிவித்தார். இச்சட்டம், 1981ம் ஆண்டு வரை அமலில் இருந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்