தேடுதல்

சிரியா நாட்டின் அலெப்போ நகரில் நிகழ்ந்த தாக்குதலில் காயமுற்ற 5 வயது சிறுவன், ஒம்ரான் தக்னீஷ் சிரியா நாட்டின் அலெப்போ நகரில் நிகழ்ந்த தாக்குதலில் காயமுற்ற 5 வயது சிறுவன், ஒம்ரான் தக்னீஷ் 

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 1

எவ்வித உணர்ச்சியும் இன்றி, எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த சிறுவன் ஒம்ரான், வன்முறையில், நாளுக்கு நாள் மூழ்கிவரும் இவ்வுலகை, உலுக்கி எழுப்பும் ஓர் அடையாளமாக, மனித சமுதாயத்தின் மனசாட்சியில் பதிந்தான்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 1

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், தன்னுடன் விமானத்தில் பயணிக்கும் செய்தியாளர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். 2016ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருத்தந்தை, அசர்பைஜான் நாட்டில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட வேளையில், உலக அமைதிக்காக வழங்கப்படும் நொபெல் விருது அறிவிக்கப்படவிருந்தது.

அப்பயணம் முடிந்து, உரோம் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானப்பயணத்தில், செய்தியாளர் ஒருவர், திருத்தந்தையிடம், "உலக அமைதி நொபெல் விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். அவருக்கு மறுமொழியாக, “போர்களை உருவாக்கி, போர்க்கருவிகளை விற்பனை செய்வதற்கென்றே பலர் இவ்வுலகில் வாழ்ந்துவருகின்றனர். அதேவேளையில், அமைதியை உருவாக்கவும், பலர், தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அமைதிக்காக உழைக்கும் பல்லாயிரம் நல்ல உள்ளங்களில், யாரைத் தெரிவு செய்வதென்பது கடினமான ஒன்று”  என்று பதிலளித்தத் திருத்தந்தை, அதே மூச்சில், அமைதியிழந்து தவிப்போரைக் குறித்துப் பேசினார்: “அமைதி விருது குறித்து எண்ணிப்பார்க்கும்போது, போரினால் உயிரிழக்கும் பல்லாயிரம் குழந்தைகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். குழந்தைகளும், குடிமக்களும் இறக்கும்படி தாக்குதல்களை நிகழ்த்துவது, உண்மையிலேயே கொடிய பாவம்” என்று திருத்தந்தை வேதனையுடன் பேசினார்.

அவ்வேளையில், சிரியா நாட்டில் நிகழ்ந்துவந்த கொடுமையை மனதில் வைத்து திருத்தந்தை இவ்வாறு கூறினார் என்பதை செய்தியாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். 2016ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், சிரியா அரசு, இரஷ்யாவின் உதவியுடன், அலெப்போ நகரில் மேற்கொண்ட தாக்குதல்களில், 100க்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர் என்பதை ஊடகங்கள் கூறின. "அலெப்போவில் ஏன் இவ்வளவு அதிகமாக குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்" (Why So Many Children Are Being Killed in Aleppo) என்ற செய்திக் கட்டுரை, அவ்வாண்டு, செப்டம்பர் 27ம் தேதி, நியூ யார்க் டைம்ஸ் என்ற நாளிதழின் வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

அக்கட்டுரையில், வெளியிடப்பட்ட புகைப்படங்கள், நம் உள்ளங்களை கீறி, காயப்படுத்தின. குண்டுகளால் தாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்களில், கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து, உயிரற்று, அல்லது, அரை உயிரும், கால் உயிருமாக வெளியே கொணரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வெளியாகியிருந்தன. அலெப்போ நகரில் தங்கியிருந்த 2,50,000 மக்களில், 1,00,000 குழந்தைகள் இருந்தனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

2016ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தொலைக்காட்சியிலும், செய்தித் தாள்களிலும் வெளியான ஒரு சிறுவனின் படம் நம் கவனத்தை ஈர்த்திருக்கும், இதயத்தைக் கனமாக்கியிருக்கும். சிரியா நாட்டின் அலெப்போ நகரைச் சேர்ந்த 5 வயதான, ஒம்ரான் தக்னீஷ், (Omran Daqneesh) என்ற சிறுவன், ஓர் ஆம்புலன்ஸ் வண்டியின் இருக்கையில் அமர்ந்திருந்த படம் அது. அவனது தலைமுதல் கால்வரை, தூசியும், சாம்பலும், மண்டிக்கிடந்தன. அவன் முகத்தில், பாதிக்குமேல் இரத்தக் கறை. ஆகஸ்ட் 17ம் தேதி, அலெப்போ நகரில் ஏற்பட்ட தாக்குதலில், ஒம்ரான் அடிபட்டபோது, அவனது அண்ணன், 11 வயது நிறைந்த அலி தக்னீஷ் கொல்லப்பட்டான் என்று, அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. எவ்வித உணர்ச்சியும் இன்றி, எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த சிறுவன் ஒம்ரான், வன்முறையில், நாளுக்கு நாள் மூழ்கிவரும் இவ்வுலகை, உலுக்கி எழுப்பும் ஓர் அடையாளமாக, மனித சமுதாயத்தின் மனசாட்சியில் பதிந்தான். ஒரு வார்த்தையும் பேசாத அவனது முகம், பல ஆயிரம் கேள்விகளை நம்மிடம் கேட்டது.

சிறுவன் ஒம்ரானைக் காட்டும் இக்காணொளிச் செய்தியில், ஓரிடத்தில், நம் உள்ளம் அதிகமாகக் காயப்பட்டது. ஆம்புலன்ஸ் வண்டியில் அமர்ந்திருந்த ஒம்ரான், தன் முகத்தில் வடிந்துகொண்டிருந்த இரத்தத்தை இடது கையால் துடைத்து, தன் உள்ளங்கையைப் பார்த்தான். பின்னர், ஒரு குழந்தைக்கே உரிய சுதந்திரத்துடன், அந்த இரத்தத்தை தான் அமர்ந்திருந்த இருக்கையில் துடைத்தான். பொதுவாக, ஐஸ்கிரீம், அல்லது, சாக்லேட் என்று, எதையாவது சாப்பிடும் குழந்தை, தன் கையில் பட்ட ஐஸ்கிரீம் அல்லது, சாக்லேட்டை, தன் உடையில், அல்லது, தான் அமர்ந்திருக்கும் இருக்கையில் துடைப்பதைப் பார்த்திருக்கிறோம். அதே போன்றதொரு செயலை, இந்தக் காணொளியிலும் நாம் காண்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேறுபாடு. சிறுவன் ஒம்ரான் துடைத்தது, ஐஸ்கிரீம் அல்ல, சாக்லேட் அல்ல, அவனுடைய இரத்தம். அச்சிறுவன் அவ்விதம் செய்தது, நம் உள்ளத்தை கீறி, இரணமாக்கியது. தன் இரத்தத்தை தானே காணும் அக்குழந்தையின் மனதில் என்ன தோன்றியிருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை.

ஒம்ரானைப்போல் அடிபட்டு, இரத்தம் சிந்தும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் இரத்தத்தைத் துடைக்கவோ, நிறுத்தவோ வழியின்றி தவிக்கும் இன்றைய உலகின் இயலாமையை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது. உலகின் வன்முறைகளால் பெருக்கெடுத்தோடும் இரத்த வெள்ளத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் நாம், இரத்தம் தொடர்பான ஒரு புதுமையை, குறிப்பாக, இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒரு பெண்ணின் துயர் துடைத்து, அவரது இரத்தப்போக்கை நிறுத்திய இயேசுவின் புதுமையை, இன்றைய நம் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம்.

ஒத்தமை நற்செய்திகளில், இடம்பெற்றுள்ள 12 பொதுவான புதுமைகளில், 8 மற்றும் 9 ஆகிய இரு புதுமைகளை இணைத்து, நம் தேடல் பயணம் இன்று ஆரம்பமாகிறது.  8வது புதுமை, இரத்தப் போக்குடைய பெண் குணமடைதல். 9வது புதுமை, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் என்பவரின் மகளை இயேசு குணமாக்குதல். இவ்விரு புதுமைகளும் ஒரே நாளில் நிகழ்ந்தன என்பதாலும், இவ்விரு புதுமைகளும், உயிர், இரத்தம் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தியதாலும், இவற்றை இணைத்து சிந்திக்க முயல்வோம்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் மூவரும் இணைத்துள்ளதைப் போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இரு பெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும், இயேசுவால் குணம் பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண், பன்னிரு ஆண்டுகளாய், இரத்தப்போக்கினால், தன் உயிரை, கொஞ்சம், கொஞ்சமாய் இழந்துவருபவர். சிறுமியோ, பன்னிரு ஆண்டுகளாய், சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிரிழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல், கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு தொட்டு உயிரளிக்கிறார்.

கெரசேனர் பகுதியில் தீய ஆவி பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமையைத் தொடர்ந்து, 'இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்ற தலைப்பில், இவ்விரு புதுமைகளை, நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும், உடனடியாகப் பதிவுசெய்துள்ளனர். நற்செய்தியாளர் மத்தேயு, வேறு சில நிகழ்வுகளுக்குப் பின் இப்புதுமையைக் கூறியுள்ளார்.

கெரசேனர் பகுதியில், பேய் பிடித்தவரை இயேசு குணப்படுத்திய அப்புதுமையின் விளைவாக, அந்த ஊர் மக்கள் தங்கள் ஊர்ச்சொத்தான 2000த்திற்கும் அதிகமான பன்றிகளை இழந்தனர். எனவே, அவர்கள், இயேசுவை, தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு வேண்டிக்கொண்டனர். மக்களின் விருப்பத்திற்குப் பணிந்து, இயேசு அங்கிருந்து கிளம்பினார்.

அதைத் தொடர்ந்து, உடனடியாக, இப்புதுமைகளின் ஆரம்ப வரிகளை, மாற்கு நற்செய்தியிலும், லூக்கா நற்செய்தியிலும் இவ்வாறு வாசிக்கிறோம்:

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். (மாற்கு 5:21) என்று மாற்கும்,

இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர். (லூக்கா 8: 40) என்று லூக்காவும் கூறியுள்ளனர்.

இவ்வரிகளை வாசிக்கும்போது, இயேசுவுக்குக் கிடைத்த வரவேற்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. கெரசேனர் பகுதி மக்கள் இயேசுவை தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு கூறியதற்கு நேர் மாறாக, கடலின் மறுகரையில் இருந்தவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

துரத்தியடிக்கப்படுவதும், வரவேற்கப்படுவதும் இயேசு அடிக்கடி சந்தித்த அனுபவங்கள். அவரைப் பொருத்தவரை, வரவேற்கப்பட்டாலும் சரி, விரட்டியடிக்கப்பட்டாலும் சரி, மனிதர்களுக்குத் தேவையான நலன்களை வழங்குவது ஒன்றையே, அவர் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இயேசு மறுகரையை அடைந்ததும், அவரைத் தேடி, தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 14:51