தேடுதல்

"நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்."- லூக்கா 14:13 "நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்."- லூக்கா 14:13 

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இன்று, இரு முக்கிய கருத்துக்களைக் குறித்து சிந்திப்போம்; செபிப்போம். முதல் கருத்து - செப்டம்பர் 1, நாம் சிறப்பிக்கும் “படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்”. இரண்டாவது கருத்து - மனித வாழ்வில் நிகழும் விருந்தோம்பல் என்ற அழகிய அனுபவம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இன்றைய ஞாயிறு வழிபாட்டில், நாம், இரு முக்கிய கருத்துக்களைக் குறித்து சிந்திப்போம்; செபிப்போம். முதல் கருத்து - செப்டம்பர் 1, இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் “படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்”.

“படைப்பின் பாதுகாவலர்கள் என்று நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அழைப்பைப் புதுப்பிக்கும் வகையில், நாம் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளில் பங்கேற்போம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு விடுத்த ஒர் அழைப்பின் அடிப்படையில், இன்று 5ம் முறையாக, செப்டம்பர் முதல் தேதியை, படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளாக, நாம் கடைபிடிக்கிறோம். இந்த செபநாள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய மடலில், "இறைவன் நமக்களித்துள்ள படைப்பு என்ற கொடைக்காக நன்றி செலுத்துவதோடு, படைப்பிற்கு எதிராக நாம் புரிந்துவரும் குற்றங்களுக்காக, அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நாள் நமக்கு உதவட்டும்" என்று எழுதியிருந்தார். திருத்தந்தை அனுப்பிய இவ்வழைப்பு, இரு பாடங்களை நமக்கு உணர்த்துகிறது.

முதல் பாடம்... 'படைப்பைப் பாதுகாக்கும் உலக நாள்' என்று, இந்நாளை அழைப்பதற்குப் பதில், 'படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்' என்று திருத்தந்தை அறிவித்தார். 'உலக நாள்' என்பது, ஓர் எண்ணத்தை உயர்த்திப் பிடிக்க, விளம்பரப்படுத்த, உருவாக்கப்படும் நாள்; 'உலக செபநாள்' என்பதோ, இறைவனை நோக்கி நம் எண்ணங்களை உயர்த்தி, செபிக்கும் நாள். இயற்கையைக் காப்பதற்கு, மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுடன், செபமும் தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

மனிதர்களின் அளவுகடந்த பேராசையால் அழிந்துவரும் இயற்கையை, மனிதர்கள் மனதுவைத்தால் காக்கமுடியும். இதற்கு, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மனமாற்றம் தேவை. இந்த மனமாற்றத்தை இறைவன் வழங்க, இந்த செபநாளன்று உருக்கமாக செபிப்போம். குறிப்பாக, உலகின் நுரையீரல் என்று கருதப்படும் அமேசான் காடுகள், கடந்த சில வாரங்களாக எரிந்துகொண்டிருப்பதை மனதில் இருத்தி, படைப்பைப் பாதுகாக்க, நம் செப முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

1989ம் ஆண்டு முதல், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையினர், செப்டம்பர் முதல் தேதியை, படைப்பின் பாதுகாப்பிற்காக செபிக்கும் உலகநாளாக அர்ப்பணித்து வருகின்றனர். இதை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளை, படைப்பைப் பாதுக்காக்கும் செப நாளாகக் கடைபிடிக்க, கத்தோலிக்கத் திருஅவையினருக்கும் அழைப்பு விடுத்தார். இது, நமக்கு இரண்டாவது பாடத்தைச் சொல்லித் தருகிறது.

மனிதர்களாகிய நாம், நமக்குள் உருவாக்கியிருக்கும் மதம், மொழி, நாடு, இனம் என்ற பல பிரிவுகளையும் மறந்து, ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே, இவ்வுலகை, இயற்கையை, நாம் பாதுகாக்கமுடியும் என்ற பாடத்தையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரோடு இந்நாளைச் சிறப்பிக்க, திருத்தந்தை வழங்கிய இந்த அழைப்பு நமக்குச் சொல்லித் தருகிறது.

அத்துடன், செப்டம்பர் 1ம் தேதி முதல், ‘படைப்பின் பாதுகாவலர்’ என்று வணங்கப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய, படைப்பின் காலம் என்று கொண்டாட, திருத்தந்தையோடு இணைந்து, கிறிஸ்தவ சபைகளும், கத்தோலிக்க அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. எனவே, செப்டம்பர் 1ம் தேதி, இஞ்ஞாயிறு முதல், அடுத்துவரும் 35 நாட்களுக்கு, படைப்பின் காலம் என்ற இம்முயற்சியில் நம்மையும் இணைத்துக் கொண்டு, இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் இந்த பூமிக்கோளத்தை நாம் ஒவ்வொருவரும் எவ்வகையில் பாதுகாக்கமுடியும் என்று ஆய்வுசெய்வோம்.

படைப்பின் காலம் முடிவுறும் அக்டோபர் 4ம் தேதியைத் தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி, ஞாயிறன்று, வத்திக்கானில், படைப்பைச் சார்ந்த மற்றொரு முயற்சி துவங்கவிருக்கிறது. அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி, முடிய நடைபெறும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம் என்ற முயற்சி, நல்ல பலன்களை வழங்க தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.

இஞ்ஞாயிறன்று, நம்மை சிந்திக்கவும், செபிக்கவும் அழைக்கும் இரண்டாவது கருத்து -  மனித வாழ்வில் நிகழும் விருந்தோம்பல் என்ற அழகிய அனுபவம்.

இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப் பற்றி, அந்த விருந்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தி நமக்கு வாய்ப்பளிக்கிறது. விருந்தைப்பற்றி இவ்வுலகம் சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வு செய்தால், ஓர் அடிப்படையான அம்சம் வெளிப்படும். உலகம் சொல்லித்தரும் விருந்து விதிமுறைகள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. நம் உள்ளங்களில், அகந்தை, பகைமை போன்ற உணர்வுகள் அலைமோதினாலும், விருந்து நேரத்தில், வெளிப்படையாக அவற்றைக் காட்டிக்கொள்ளாமல், 'ஜென்டில்மேன்' என்ற முகமூடி அணிந்து, விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று உலகப் பாடங்கள் சொல்லித்தருகின்றன.

இதற்கு மாறாக, இன்றைய நற்செய்தியில், (லூக்கா 14:1,7-14) இயேசு சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வுசெய்தால், அவை, உள்மனநிலையைச் சார்ந்த விதிமுறைகள் என்பதை உணரலாம். இந்த விதிமுறைகளை இயேசு துணிவுடன் கூறிய அந்தச் சூழலை நினைத்துப் பார்த்தால், இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு, பல மடங்கு உயரும்.

யூத விருந்துகளில், அதுவும், பரிசேயர் தலைவர் வீட்டில், ஒய்வு நாளில் நடந்த விருந்தில், பல சடங்குகள் இருந்திருக்கவேண்டும். இயேசு அவற்றையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை. இத்தகைய சுதந்திர மனநிலையோடு வாழ்ந்தவரை, பரிசேயர் வீட்டு விருந்து கட்டிப்போட முயன்றது. இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் நாம் காணும் "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்" என்ற சொற்கள், இந்த விருந்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தன்னை, கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் தோன்றிய உண்மைகளை, இயேசு பாடங்களாகப் புகட்டினார்.

அவரது முதல் பாடம், விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது பாடம், விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்று நினைக்கத்தோன்றும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், இயேசு, ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையை, தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச்சொன்னார் இயேசு. இயேசு வழங்கிய முதல் பாடம், விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு... அதுவும், அவர் கலந்துகொண்ட விருந்தில் பலர் முதன்மையான இடங்களைத் தேடிச்சென்றனர் என்பதை உணர்ந்து, இயேசு அவர்களுக்கு பணிவு பாடத்தைச் சொல்லித்தந்தார். - லூக்கா 14: 7-11. அவர் சொல்லித்தந்த பணிவு பாடங்களுக்கு சிகரமாக, தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். என்ற புகழ்பெற்ற அறிவரையை வழங்குகிறார், இயேசு. தாழ்ச்சியைக் குறித்து, இன்றைய முதல் வாசகத்திலும், சீராக்கின் ஞானம், அழகிய பல அறிவரைகளை வழங்கியுள்ளது.

விருந்து நேரங்களில், அவரவர், தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்று, இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுக்கு முற்றிலும் மாறாக, இயேசு சொல்லித்தரும் தாழ்ச்சிப் பாடம், மாற்றுச் சிந்தனைகளை உருவாக்குகிறது. இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனைக்காட்சி அரங்கேறும்.

நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர், நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்துவிடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன், நான் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.

விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத்தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிரித்தபடியே அமர்ந்துள்ளேன். வீட்டுத்தலைவர் என்னருகே வந்து, என்னையும் வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி, "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடமிருந்து வரவில்லை. என் மனம் உடைந்துபோகிறது. இயேசு சொன்னதுபோல் கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்த என் தாழ்ச்சி, அர்த்தமில்லாமல் போகிறது.

நான் இப்போது சித்திரித்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்... ஆனால், இத்தகையத் 'தாழ்ச்சி'யை எத்தனை முறை நாம் பல வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பது பயனளிக்கும். இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு  கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று, அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே அல்ல. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம், வெளிவேடம்! வெளிவேடமிடும் பல வரைமுறைகளைத்தான் ‘விருந்து வழிமுறைகள்’ என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காணமுடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொல்லித்தந்த பாடம், பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளியவைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்தப் பாடம், அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது. செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில், கணக்குகள் நிரம்பி வழியும். யாரை அழைக்கவேண்டும், யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள் என்று, விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும். என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யாரைச் சந்திப்பது, யாரைக் கண்டும் காணமல் போவது என்று, விருந்தினர்களின் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.

ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். மூன்று நாட்களுக்கு முன், ஆகஸ்ட் 29ம் தேதி, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளை நினைவுகூர்ந்தோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன், வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம் இயேசுவின் மனதில் இந்த வேதனை நிழலாடியிருக்கும்.

இப்படிப்பட்ட செயற்கைத் தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14

பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2019, 15:06