தேடுதல்

பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். - லூக்கா 10:17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். - லூக்கா 10:17 

பொதுக்காலம் - 14ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 14ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஜெர்மனியின் Strasbourg நகரில், இளம் பேராசிரியர் ஒருவர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதக்கட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார். இறையியலில், மெய்யியலில், இசை என்று பல துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றிருந்த அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் ஒவ்வொரு நாளும் கடித வடிவில் வந்தன. அன்று அவருக்கு வந்திருந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த இதழில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது. "காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே... கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வரிகளை வாசித்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர், தனது நாள் குறிப்பேட்டைத் திறந்து, "என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார். அன்றுவரை அவர் செய்துவந்த அனைத்தையும் விட்டுவிட்டு, அவர், ஆப்ரிக்காவில் பணியாற்ற முடிவுசெய்தார்.

30 வயது நிறைந்த அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவர் பணியாற்ற விழைந்த ஆப்ரிக்க மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஆப்ரிக்காவின் பின்தங்கியப் பகுதி ஒன்றில், தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகள், அவர், ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைத்தார். இறைவனின் அழைப்பு, ஆல்பர்ட் அவர்களின் வாழ்வை வேறு திசையில் அழைத்துச் சென்றாலும், இறைவன் மீது தன் முழு நம்பிக்கையை வைத்து, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம். இந்த உழைப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். - லூக்கா நற்செய்தி 10: 1-5

“அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு” என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் வாசிக்கிறோம். பொதுவாக, தேவ அழைத்தலுக்காகச் செபிக்கும்போது, இச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ‘தேவ அழைத்தல்’ என்றதும், குருக்கள், துறவறத்தார் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழ வாய்ப்புண்டு. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளை ஆய்வு செய்தால், இயேசு, 72 பேரை புதிதாக நியமித்து, தன் பணிக்கென அனுப்பிய வேளையில், இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்பதை உணர்கிறோம்.

இயேசுவுடன் வாழ்ந்த பன்னிருத் திருத்தூதர்கள், ஏனைய 72 சீடர்கள் அனைவருமே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள். எனவே, “அறுவடைக்கு வேலையாள்கள் தேவை” என்று இயேசு கூறியது, குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் வேலையாள்களை நினைத்து, இயேசு, இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது உண்மை.

இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை அறுவடை செய்ய, தனித் திறமைகள் பெற்றிருக்கவேண்டும். அதேநேரத்தில், பிறரோடு இணைந்து உழைக்கும் திறமையும் பெற்றிருக்கவேண்டும். இறையரசுக்காக உழைப்பவர்கள் பெற்றிருக்கவேண்டிய திறமைகளை, இன்றைய நற்செய்தியில், ஒரு சில நிபந்தனைகளாகச் சொல்கிறார் இயேசு.

முதல் நிபந்தனை: "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதா? இது விபரீதமான முயற்சியாகத் தெரிகிறதே என்று நாம் தயங்கலாம். ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள், வீரக்கதைகளாகத் தொடர்ந்து நடந்துவருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்த கோலியாத்து என்ற மனித மலையோடு (காண்க. 1 சாமுவேல், 17: 4-7) மோத புறப்பட்ட தாவீது, நம் நினைவுக்கு வருகிறார். அந்த மோதலில் யார் வென்றது, ஓநாயா, ஆட்டுக்குட்டியா என்பது நாமறிந்த வரலாறு.

"யார் இந்த அரை நிர்வாணப் பரதேசி?" என்று, ஆங்கில அரசு ஏளனமாகப் பார்த்த காந்தியடிகள் நம் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக்குட்டி, ஓநாய்களாய் வலம்வந்த ஆங்கில அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது உலகறிந்த வரலாறு.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார்.

இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலத்தடி எரிசக்திகளை ஏற்றுமதி செய்யும், பெட்ரோலிய நாடுகளின் கூட்டமைப்பான OPEC, கிரேட்டா துன்பர்க் அவர்களின் போராட்டத்தைக் குறித்து தற்போது, கலக்கமடைந்துள்ளது. OPEC நிறுவனத்தின் தலைமைச் செயலர், மொஹம்மத் பார்கிண்டோ (Mohammad Barkindo) அவர்கள், இளம்பெண் கிரேட்டா அவர்களின் போராட்டம் நிலத்தடி எரிசக்தியை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் என்று, ஜூலை 5, இவ்வெள்ளியன்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள், எதிர்காலத்திற்காகப் போராடி வரும் எனது தலைமுறைக்குக் கிடைத்த சிறந்ததொரு பாராட்டு இது என்று கூறியுள்ளார்.

பல இலட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள OPEC கூட்டமைப்பு, 16 வயது இளம்பெண்ணின் போராட்டத்தால் நிலை தடுமாறி இருப்பது, ஓநாய்கள் நடுவே ஆட்டுக்குட்டிகள் தலைநிமிர்ந்து சென்றால் என்ன நடக்கும் என்பதை நினைவுறுத்துகிறது. தான் கொண்டுள்ள குறிக்கோளில் தெளிவும், அதை அடைவதற்கு எதையும் தியாகம் செய்யும் துணிவும் கொண்ட இளம்பெண் கிரேட்டா போன்றோரை மனதில் கொண்டு, "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" என்ற உருவகத்தை இயேசு பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் போகவேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. சரி. அதற்குத் தகுந்ததுபோல், எல்லா ஏற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டாமா? மீண்டும் தாவீது நம் நினைவுக்கு வருகிறார். கோலியாத்தை எதிர்த்துச் செல்லும்போது, தற்காப்புக்காக, அவருக்கு கவசம் தேவைப்படும் என்று மற்றவர்கள் நினைக்க, தாவீதோ, தன் மீது போடப்பட்ட கவசங்களையெல்லாம் கழற்றிவைத்துவிட்டு, ஒரு கவணையும், கல்லையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார், இளையவர் தாவீது. அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? ஆயனாக இருந்த தாவீது, ஆண்டவனை அதிகம் நம்பியவர். தன்னையும், தன் ஆடுகளையும், இரத்த வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையால் விளைந்த வீரம் அது (1 சாமுவேல், 17: 37). நம்பிக்கை இருந்தால் போதும், நம் கையில் வேறெதுவும் வேண்டாம் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். "பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்லவேண்டாம்" என்று ஒலிக்கிறது, இயேசுவின் இரண்டாவது நிபந்தனை.

நமது பயணங்களை எண்ணிப் பார்ப்போம். பயணம் என்று சொன்னதும், நாம் சுமந்து செல்லும், அல்லது, இழுத்துச் செல்லும் பெட்டிகள் நம் மனக்கண்களில் அணிவகுத்து நிற்கும். இதற்கு நேர் மாறாக, நமது பயணங்களுக்கு எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது, நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாகத் தெரிகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள ஆழமான உண்மைகள் புரியும்.

நாம் எல்லாருமே இவ்வுலகில் வழிபோக்கர்கள்தாம். போகும் வழியில், நாம் பொருள்களை சேகரித்துக்கொண்டே போனால், இறுதியில், என்ன செய்யப் போகிறோம்? நம் இறுதிப் பயணத்தின்போது, இயேசுவின் இந்த ஆலோசனையை முற்றிலும் பின்பற்ற வேண்டியிருக்குமே. ஒன்றுமே எடுத்துச் செல்லமுடியாத அந்த இறுதிப் பயணத்திற்கு முன்னேற்பாடாக, இப்போதிருந்தே, திரட்டுதல், குவித்தல், சேர்த்து வைத்தல் போன்ற நோய்களிலிருந்து, கொஞ்சம், கொஞ்சமாய், விடுதலை பெறலாமே!

இயேசுவுக்கு இது எளிதாக இருந்திருக்கும். ஏனெனில், அவரிடம் சொத்து என்று ஒன்றுமே இல்லை. ஆனால், உலகத்தில் பல நாடுகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டிவைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டரும், இதே கருத்தைத்தானே தன் இறுதி மூன்று ஆசைகளில் ஒன்றாக சொல்லிச் சென்றார். தனது சவ ஊர்வலத்தில், திறந்தபடி இருந்த வெறும் கைகளை, சவபெட்டிக்கு வெளியில், மக்கள் பார்க்கும்படி அவர் வைக்கச் சொன்னார். அதற்கு காரணம் கேட்ட தளபதியிடம், வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு செல்வோம் என்ற பாடத்தை மக்கள் உணரவேண்டும் என்று சொன்னார், மாவீரன் அலெக்சாண்டர்!

வெறுங்கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று கூறும் இயேசு, கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இல்லங்களில் எல்லாம் அமைதி என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இது தன் பணியாளர்களுக்கு இயேசு தரும்  மூன்றாவது நிபந்தனை.

தன் சீடர்களுக்கு இயேசு வழங்கியுள்ள இந்த மூன்று நிபந்தனைகளுமே நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற தயக்கம் எழுகிறது. மனித இயல்பு, உலக வழக்கு என்ற குறுகிய வட்டங்களை நம்மைச் சுற்றி வரைந்துகொண்டு சிந்திப்பதால், நமக்குள் எழும் தயக்கம் இது. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்கமுடியாமல், சிறைப்படுத்தப்படுகின்றன.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்" (எசாயா 65:25) என்ற கனவை, இறைவாக்கினர் எசாயா மொழிந்தார். இயேசுவோ, அந்தக் கனவையும் தாண்டி, இன்றைய நற்செய்தியின் வழியே சொல்வது இதுதான்: "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுமின்றி, ஓநாய்களிடையே செல்லும் ஆட்டுக்குட்டிகள், ஓநாய்களுக்குச் சமாதான ஆசீரை வழங்கட்டும்" என்பது, இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.

இயேசு கூறிய நிபந்தனைகளைக் கேட்டு, அவரது சீடர்களின் உள்ளங்களில், 'இது நடைமுறைக்கு ஒத்து வருமா?' என்ற கேள்வி எழுந்திருக்கும். இருப்பினும், அவர்கள், தங்கள் தலைவனை நம்பி பயணித்தனர். பலன் அடைந்தனர். அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, ஒன்றுமில்லாத நிலையில் சென்றனர், திரும்பி வந்தபோது, நிறைவுடன் வந்தனர். தங்கள் நிறைவைக் குறித்து, அவர்கள் வியந்து பேசும்போது, இயேசு அவர்களுக்கு மீண்டும் ஒரு சவாலை முன்வைக்கிறார்.

நீங்கள் அடைந்த வெற்றியைக் குறித்து ஆரவாரம் செய்யாதீர்கள், "தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக்கா 10:20) என்று இயேசு வழங்கும் சவாலுடன், இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

“திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.” (He who fails to plan, plans to fail) என்பன போன்ற மேலாண்மைப் பாடங்கள் வழியே, திட்டங்கள் தீட்டுதல், அவற்றைத் திறம்பட முடித்தல், செல்வங்களைச் சேர்த்தல் என்ற வழிகளை நம் வாழ்வில் திணிக்கும் இன்றைய உலகின் அளவுகோல்களை ஒதுக்கிவைக்கும் துணிவை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். மறு உலகில் நம் பெயர்கள் நிரந்தரமாக எழுதப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, அவரது பணியில் ஈடுபடும் தாராள உள்ளத்தை, நமக்கு அருளவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2019, 14:52