ஈராக் கிறிஸ்தவர்கள் ஈராக் கிறிஸ்தவர்கள் 

ஈராக் கிறிஸ்தவ சமுதாயத்தின் மறுபிறப்பை உறுதிசெய்ய...

ஊழல்களால் சிதைந்திருக்கும் ஈராக் நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை மறுபிறப்பை வழங்கும் ஓர் அடையாளமாக விளங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் பரவலாக நிலவும் ஊழல்களால் சிதைந்திருக்கும் அந்நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை மறுபிறப்பை வழங்கும் ஓர் அடையாளமாக விளங்கும் என்று பாஸ்ரா உயர் மறைமாவட்டத்தின் கல்தேய வழிபாட்டுமுறை பேராயர், Alnaufali Habib Jajou அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களை விசுவாசம் அற்றவர்கள் என்று குற்றம் சாட்டும் ஈராக் சமுதாயத்தில் கிறிஸ்தவர்களின் சம உரிமைகளை வலியுறுத்துவது ஒவ்வொரு கிறிஸ்தவ நிறுவனத்தின் கடமை என்பதை பேராயர் Habib Jajou அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிலவும் வேறுபாடுகளை, குறிப்பாக, பொருளாதார அடிப்படையில் நிலவும் கொடுமையான ஏற்றத்தாழ்வுகளை மாற்றுவது, அரசின் முக்கிய கடமை என்பதையும், பேராயரின் அறிக்கை வலியுறுத்துகிறது.

பல வழிகளிலும் தங்கள் அடையாளங்கள் மறுக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயம், மீண்டும் தன் அடையாளங்களைப் பெறும் வண்ணம் மறுபிறப்பு அடைவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை ஒரு உந்து சக்தியாக அமையும் என்று தான் நம்புவதாக, பேராயர் Habib Jajou அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2019, 15:12