தேடுதல்

இலங்கையில் மீண்டும் திறக்கப்பட்ட புனித அந்தோனியார் திருத்தலத்தில் பக்தர்கள் இலங்கையில் மீண்டும் திறக்கப்பட்ட புனித அந்தோனியார் திருத்தலத்தில் பக்தர்கள் 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் திறப்பு

நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை என்றுரைத்த இலங்கை கர்தினால் இரஞ்சித் அவர்கள், முதுகெலும்புள்ள அரசியல்வாதிகள் நாட்டிற்கு தேவை என்று கூறினார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் கொழும்பு நகரில், உயிர்ப்புப் பெருவிழாவன்று பயங்கரவாதத்தால் தாக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், ஜூன் 12, இப்புதன் மாலையில் அர்ச்சிக்கப்பட்டு, பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புனித அந்தோனியார் விழாவான ஜூன் 13, இவ்வியாழன் காலையில் விழாத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளையும், தலைமையேற்று நிகழ்த்திய கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்கள் எல்லாரும், புனிதர்கள் என்றும், அவர்களையும், அவர்களின் உறவுகளையும், ஒவ்வொரு நாளும் நாம் நினைவுகூர்வோம் என்றும் கூறினார்.

இத்திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கைகள் அனைத்தும், அக்குடும்பங்களின் நல்வாழ்வுக்காகச் செலவழிக்கப்படும் என்றும் உரைத்த, கர்தினால் இரஞ்சித் அவர்கள், மனித வாழ்வைவிட விலையேறப்பெற்றது எதுவுமில்லை என்றும், அடுத்தவருடைய உயிரைப் பறிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்றும் மறையுரையாற்றினார்.  

ஒவ்வொரு மனித வாழ்வும் மதிப்பிற்குரியதே என்றும், அரசியல் இலக்குகளை எட்டுவதற்காக, மனித வாழ்வு பயன்படுத்தப்படுவதை முற்றிலும் புறக்கணிக்கின்றோம் என்றும், தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு விண்ணகத்தில் இடமில்லை என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

முதுகெலும்பு உள்ளவர்கள், தவறுகள் இழைக்காதவர்கள், தவறுகள் செய்பவர்களைப் பாதுகாக்காதவர்கள், மற்றும் தங்கள் மத்தியில் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும், நேர்மையான அரசியல் தலைவர்கள் இலங்கை நாட்டிற்குத் தேவை என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

நேர்மையான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை என்பதையும், இலங்கை கர்தினால் இரஞ்சித் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

புனித அந்தோனியார் திருத்தலத்தை, இலங்கை கடற்படை பழுது பார்த்துள்ளது. இங்கு ஏப்ரல் 21ம் தேதி இங்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 15:03