தென் கொரியா அமைதி பேரணி தென் கொரியா அமைதி பேரணி 

'அமைதியின் காற்று - இளையோரின் அமைதி திருப்பயணம்'

ஆகஸ்ட் 16 முதல் 22 முடிய நடைபெறவிருக்கும் அமைதித் திருப்பயணத்தில் கலந்துகொள்ள 19 வயது முதல், 27 வயது வரை உள்ள இளையோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் - சோல் உயர் மறைமாவட்டம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் சோல் உயர்மறைமாவட்டத்தின் 'கொரிய மக்களின் ஒப்புரவு பணிக்குழு', 'அமைதியின் காற்று - உலக இளையோரின் அமைதி திருப்பயணம்' என்ற பெயரில் இவ்வாண்டு ஏற்பாடு செய்துவரும் நிகழ்வில் கலந்துகொள்ள இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே, இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத, Goseong, Yanggu, Cheolwon மற்றும் Yeoncheon ஆகிய நகரங்களில், இத்திருப்பயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் இந்த அமைதித் திருப்பயணத்தில் கலந்துகொள்ள 19 வயது முதல், 27 வயது வரை உள்ள இளையோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று சோல் உயர் மறைமாவட்டம் கூறியுள்ளது.

2018ம் ஆண்டு இத்திருப்பயணம் ஆரம்பமான வேளையில் உரை வழங்கிய சோல் பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், கொரியாவின் இளையோர் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இளையோர், அமைதியை விரும்புகின்றனர் என்பதை, இத்திருப்பயணம் உலகிற்கு உணர்த்தட்டும் என்று கூறினார்.

2012ம் ஆண்டு முதல், 'அமைதியின் காற்று' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த திருப்பயண முயற்சியில், லாவோஸ், மெக்சிகோ, மால்ட்டா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர் பங்கேற்று வருகின்றனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 15:08