ACN அமைப்பின் தூண்டுதலால் சிரியாவில் அமைதி நிலவ செபம் ACN அமைப்பின் தூண்டுதலால் சிரியாவில் அமைதி நிலவ செபம் 

ACN கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் 2018 ஆண்டறிக்கை

ACN அமைப்பால் திரட்டப்பட்ட நிதியிலிருந்து, 27 விழுக்காடு, ஆப்ரிக்க நாடுகளுக்கும், 25 விழுக்காடு, மத்தியக் கிழக்குப் பகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி' என்ற பொருள்படும், Aid to the Church in Need - ACN, என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, 2018ம் ஆண்டு, தன் பணிகளுக்கு 11 கோடியே, 11 இலட்சம் யூரோக்கள் நிதியைத் திரட்டி, பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது என்று, இவ்வமைப்பின் 2018ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

23 நாடுகளில் உள்ள 3,30,000 தனிப்பட்டோரின் தாராள கொடைகளால் திரட்டப்பட்ட இந்த நிதி, 139 நாடுகளில் 5,019 பணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.

கொடையாளிகளின் தாராள உள்ளம் தங்களை ஆழமாகத் தொட்டுள்ளது என்றும், அவர்களின் நம்பிக்கையும், தியாகமும் மலைகளை பெயர்த்துள்ளன என்பதை, அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும், ACN உலக அமைப்பின் இயக்குனர், Thomas Heine-Geldern அவர்கள் கூறியுள்ளார்.

திரட்டப்பட்ட நிதியிலிருந்து, 27 விழுக்காடு, ஆப்ரிக்க நாடுகளுக்கும், 25 விழுக்காடு, மத்தியக் கிழக்குப் பகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.

ACN வழங்கிய உதவிகளில், 86 இலட்சம் யூரோக்கள் சிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இது, 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியைக் காட்டிலும், 29 இலட்சம் கூடுதல் என்றும் இவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியில், 31.9 விழுக்காடு, வீடுகள், சிற்றாலயங்கள், துறவு இல்லங்கள், மேய்ப்புப்பணி மையங்கள் ஆகியவை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ACN திரட்டியுள்ள நிதியின் பெரும்பங்கு, 40,569 அருள்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு அடுத்தபடியாக, அருள்பணியாருக்கென பயிற்சி பெறும் 11,817 இளையோருக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ACN அமைப்பு 2018ம் ஆண்டு திரட்டிய நிதியிலிருந்து, 11.2 விழுக்காடு, மறைக்கல்வி ஆசிரியர்களாக, பொதுநிலையினரின் தலைவர்களாக பணியாற்றும் 14,169 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரியவந்துள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2019, 14:34