கொழும்பு காரித்தாசின் தவக்கால நடவடிக்கைகள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இலங்கையின் கொழும்பு உயர்மறைமாவட்டத்தில், இவ்வாண்டு தவக்காலத்தில் திரட்டப்படும் நன்கொடை நிதி, இளையோர், மாற்றுத்திறன்கொண்ட சிறார் மற்றும் புற்றுநோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று, அம்மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி Lawrence Ramanayake அவர்கள் தெரிவித்தார்.
Seth Sarana எனப்படும் கொழும்பு காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Ramanayake அவர்கள் ஆசியச் செய்தியிடம் இந்நடவடிக்கைகள் பற்றி விளக்குகையில், இந்த தவக்காலத்தில் திரட்டப்படும் ஒவ்வொரு பைசாவும், இளையோர் தொழிற் கல்வி பயிற்சிக்கும், மாற்றுத்திறனாளர் சிறார்க்கு ஆதரவான செயல்பாடுகளுக்கும், புற்றுநோயாளிகள் பராமரிப்புகளுக்கும் செலவழிக்கப்படும் என்று கூறினார்.
நிதி சேகரிப்புக்கென ஏறக்குறைய மூன்று இலட்சம் காகித உறைகள் மற்றும், 1,500 உண்டியல் பெட்டிகள் தயார்செய்யப்பட்டுள்ளன என்றுரைத்த, அருள்பணி Ramanayake அவர்கள், 134 பங்குத்தளங்கள், கத்தோலிக்க பள்ளிகள் மற்றும், உயர்மறைமாவட்ட அமைப்புகளில் இந்நடவடிக்கை குறித்து விளக்குவதற்கு உதவியாக, துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தவக்காலத்தில், 17,32,363 ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.
இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் Caritas-Sedec எனப்படும் இந்தப் பிறரன்பு அமைப்பு, 1968ம் ஆண்டில், அருள்பணி ஜோ பெர்னான்டோ அவர்களால் உருவாக்கப்பட்டது. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்