மத்தியக் கிழக்கு மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒப்பந்தம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
போரினால் காயப்பட்டிருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதியில், போருக்கு எதிராக அபு தாபியில் எழுப்பப்பட்டுள்ள குரல், இப்பகுதியில் உள்ள நாடுகளை விழித்தெழச் செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று மாரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் Beshara al-Rahi அவர்கள் கூறினார்.
"மனித உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில், அபு தாபியில் நடைபெற்ற பல் சமய கருத்தரங்கில் கலந்துகொண்ட கர்தினால் al-Rahi அவர்கள், இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய அரபு அமீரகத்தையும், கருத்தரங்கில் உருவான ஒப்பந்தத்தையும் பாராட்டிப் பேசினார்.
மதங்களுக்கிடையே உருவாகும் மோதல்களுக்கும் போருக்கும் பேர் பெற்ற மத்தியக் கிழக்குப் பகுதியில், இந்த ஒற்றுமை முயற்சி இடம் பெற்றிருப்பது, இப்பகுதியில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று கர்தினால் al-Rahi அவர்கள் எடுத்துரைத்தார்.
700க்கும் அதிகமான பல் சமய உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் al-Rahi அவர்கள், உலகில் அனைத்து போர்களும் முடிவுக்கு வரவேண்டுமென்று சிறப்பான அழைப்பு விடுத்தார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்