இலங்கை மீள்குடியமர்த்தும் பணியில் கத்தோலிக்க காரித்தாஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
2009ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, தென் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை, காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்க, கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு தயாராக உள்ளது என்று கூறிய தேசிய இயக்குனர், அருள்பணி மகேந்திரா குணதிலக்கே அவர்கள், இதற்குத் தேவையான நிதி உதவிகளை, ஜப்பான் காரித்தாஸ் அமைப்பு வழங்குவதாகவும் கூறினார்.
குடிபெயர்ந்த மக்கள், தங்கள் பிறப்பு, திருமணம், உடைமைகள் தொடர்புடைய ஆவணங்களைப் பெறுவதற்கு, காரித்தாஸ் அமைப்பு உதவும் என்றும், குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதற்கு உதவி, மற்றும், அவர்களை, மீண்டும் இலங்கையில் குடியமர்த்தத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார், அருள்பணி மகேந்திரா.
குடிபெயரும் குடும்பங்களுக்கு துவக்கக்கால உதவித் தொகைகள் வழங்கப்படுவதுடன், சுயதொழில் பயிற்சியும் வழங்கப்படும் என்று கூறிய அருள்பணி மகேந்திரா அவர்கள், தற்போது, இத்திட்டம், மன்னார், திரிகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்