சிரியா நாட்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஸ்பெயின் நாட்டின் வலென்சியா உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Antonio Cañizares Llovera அவர்கள் விடுத்த ஓர் விண்ணப்பத்தின் அடிப்படையில், அம்மறைமாவட்டத்தில், திருக்காட்சிப் பெருவிழாவன்று திரட்டப்பட்ட காணிக்கைத் தொகையில் ஒரு பகுதி, சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.
அன்பு, அமைதி, மன்னிப்பு ஆகிய உயரிய எண்ணங்களை வலியுறுத்தும் கிறிஸ்மஸ் காலத்தில், துன்புறும் கிறிஸ்தவர்கள் நோக்கி நம் கவனத்தைத் திருப்புவது, தகுந்ததொரு முயற்சி என்று கர்தினால் Llovera அவர்கள் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, சனவரி 1ம் தேதி முதல் 6ம் தேதி முடிய வலென்சியா மறைமாவட்டத்தில் நிதி திரட்டும் முயற்சிகள் நிகழ்ந்தன என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.
வலென்சியா மறைமாவட்டத்தின் புனித ஆந்திரேயா பங்குக் கோவிலில் திரட்டப்பட்ட 15,100 யூரோக்கள் நிதி, சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், இத்தொகையிலிருந்து 7,500 யூரோக்கள், வேலை வாய்ப்புக்களை உருவாக்க, காரித்தாஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் வத்திக்கான் செய்தித்தாள் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்