Rohingya புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார் கர்தினால் தாக்லே
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மியான்மார் நாட்டின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ள, Rohingya முஸ்லிம் மக்களுக்கு, காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
பங்களாதேஷ் நாட்டிற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, மனிலா பேராயராகிய, கர்தினால் தாக்லே அவர்கள், அந்நாட்டிலுள்ள Rohingya புலம்பெயர்ந்தவர் முகாமை, இத்திங்களன்று பார்வையிட்டு, கடினமான சூழல்களில் வாழ்கின்ற அம்மக்களுக்கு ஆற்றப்பட்டுவரும் உதவிகள் தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்று உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.
பங்களாதேஷின் Cox's Bazar மாவட்டத்தில், முகாம்களில் வாழ்கின்ற Rohingya புலம்பெயர்ந்துள்ள மக்களைப் பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடியதுடன், அம்மாவட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசினார், கர்தினால் தாக்லே.
Cox's Bazar மாவட்டத்திலுள்ள முப்பது முகாம்களில், மிகப்பெரிய Kutupalong புலம்பெயர்ந்தவர் முகாமைப் பார்வையிட்டு, அம்மக்களுக்கு காரித்தாஸ் அமைப்பு ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டினார், கர்தினால் தாக்லே.
மியான்மாரின் Rakhine மாநிலத்தில், 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இடம்பெற்ற, மரணத்தை வருவிக்கும் அடக்குமுறைகளுக்கு அஞ்சி வெளியேறிய, பத்து இலட்சத்திற்கு அதிகமான, Rohingya முஸ்லிம்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது பங்களாதேஷ் நாடு. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்