கிறிஸ்து அரசர் பெருவிழா - ஞாயிறு சிந்தனை
ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்
இரு வாரங்களுக்கு முன், நவம்பர் 11ம் தேதி, ஞாயிறன்று, உலகின் பல நாடுகளில், ஒரு வரலாற்று நினைவு கடைபிடிக்கப்பட்டது. முதல் உலகப்போர் என்றழைக்கப்படும் ஐரோப்பிய போர், 1918ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்ததன் முதல் நூற்றாண்டு நினைவு அது. அந்த நினைவைச் சிறப்பிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து ஏறத்தாழ 70 தலைவர்கள், பாரிஸ் மாநகரில் கூடியிருந்தனர்.
இந்த முக்கிய நிகழ்வைச் சிறப்பிக்க வந்திருந்த உலகத்தலைவர்கள் அனைவரும், குறிப்பிட்ட நேரத்தில், ஓரிடத்தில் கூடியிருக்க, வல்லரசுகள் என்று தங்களையே பறைசாற்றிக்கொள்ளும் இரு நாடுகளின் தலைவர்கள், இந்நிகழ்வுக்கு தாமதமாக வந்துசேர்ந்தனர். பொது நிகழ்வுகளில், மற்றவர்களைக் காக்கவைத்து, தாமதமாக வந்துசேர்வது, பல தலைவர்கள் பின்பற்றும் அற்பத்தனமான ஒரு விளம்பரம். முடி சூடா மன்னர்களாக வலம்வந்த அத்தலைவர்கள், பல்வேறு வழிகளில், தாங்களே பெரியவர்கள் என நிரூபிக்க முயன்றது, பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 'யார் பெரியவர்' என்ற கேள்விதான், முதல் உலகப்போரைத் துவக்கி வைத்தது என்பதை, அவ்விரு தலைவர்களும், இன்னும் பல உலகத் தலைவர்களும் உணர்ந்துள்ளனரா என்பது சந்தேகம்தான்.
உலகத் தலைவர்களிடையே நிலவும் 'யார் பெரியவர்' என்ற போட்டியால், உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும், போர்களும், வன்முறைகளும் பெருகியுள்ளன. உளநாட்டுப் போரினால் பல ஆண்டுகள் சிதைந்திருந்த இலங்கை, ஓரளவு நிலைபெற்று சில ஆண்டுகளே ஆன நிலையில், மீண்டும், அங்கு நிலையற்ற அரசியல் உருவாகியிருப்பதை நாம் அறிவோம். இரு உலகப்போர்களை சந்தித்த இவ்வுலகம், தற்போது, மூன்றாவது உலகப்போரை, உலகின் பலப் பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகிறது என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில வேளைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
இத்தகையச் சூழலில், கிறிஸ்துவை ஓர் அரசராகக் கொண்டாட, இந்த ஞாயிறன்று, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். கத்தோலிக்கத் திருஅவையில் இவ்விழா உருவாக, முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது என்ற உண்மை, இவ்விழாவைக் குறித்தும், உண்மையானத் தலைவர்களிடையே நிலவ வேண்டிய பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.
முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை, 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.
முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்திருந்தார். இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலக அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள், குறிப்பாக, அரசுத்தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.
கிறிஸ்து அரசர் திருநாளைப் பற்றி நினைக்கும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம், ‘கிறிஸ்து’ என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர்’ என்ற வார்த்தையில்தான்.
அரசர் என்றதும், மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்!
அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.
அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர். அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.
இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு அரசர்கள்! இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின், வேறுபட்ட அரசத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.
‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு. எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான பிலாத்துவையும், இயேசுவையும் இணைத்து சிந்திக்க, இன்றைய நற்செய்தி வாய்ப்பளிக்கிறது. யோவான் நற்செய்தியில், இயேசுவின் பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ள ஒரு காட்சி, இத்திருநாளின் நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.
நற்செய்தியாளர் யோவான், இயேசுவின் பாடுகளைப்பற்றி பதிவு செய்துள்ள 82 இறைவாக்கியங்களில் (பிரிவு 18,19) பெரும் பகுதி, தலைமைகுருவுக்கு முன்னும், பிலாத்துவுக்கு முன்னும் நிகழ்ந்த விசாரணைகளாக அமைந்துள்ளது. இவ்விரு விசாரணைகளிலும், இயேசு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில், தலைமைக்குரு, மதத்தலைவர்கள், பிலாத்து, மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
கரங்கள் கட்டப்பட்டு, கசையடிப்பட்டு, முள்முடி தாங்கி, சக்தி அனைத்தையும் இழந்த நிலையில், மக்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த இயேசு, சூழ நின்ற அனைவரையும் விட சுதந்திரமாக, சக்தி மிகுந்தவராக விளங்கினார் என்பதை, நற்செய்தியாளர் யோவான், இப்பகுதியில், நமக்கு, மீண்டும், மீண்டும் நினைவுறுத்துகிறார்.
அதற்கு நேர்மாறாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக, தவறான தீர்ப்பு சொன்ன பிலாத்து, பொறாமையாலும், வெறுப்பாலும் சிறைப்பட்டிருந்த மதத்தலைவர்கள், சுதந்திரமாகச் சிந்திக்கும் சக்தியை இழந்து நின்ற மக்கள் அனைவரும், பல்வேறு வழிகளில், தங்கள் சுதந்திரத்தை இழந்து, குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சியில், யார் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர், யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்து பெரியவரா? அல்லது, பதவி என்ன, உயிரே பறிபோனாலும், உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று, பதட்டம் ஏதுமின்றி, நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசு பெரியவரா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்? இக்கேள்விகளின் விடை, அனைவருக்கும் தெரிந்ததே!
அரியணையில் அமர்வது ஒன்றே நிரந்தர வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருந்த பிலாத்து, இன்றைய உலகத் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். மற்றவர்களை அடிபணியச் செய்து, அல்லது, அடிபணிய மறுத்தவர்களை சடலங்களாக்கி, அவர்கள் மீது ஏறிச்சென்று, தங்கள் அரியணையில் அமர்ந்துள்ள ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். இவர்கள் அனைவரும், உண்மைக்கு எதிர் சாட்சிகளாக வாழ்பவர்கள்.
உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள், அலங்கார அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாமும் நம்பிக்கையுடன் அணுகிச் செல்வோம்.
இறுதியாக, ஓர் எண்ணம்... "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி" என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், "குடிகள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிமக்கள் அடிமைகளாக வாழ தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை. கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று, அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு, தலைவர்களையும், தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள் தவறுகளிலிருந்து விழித்தேழவேண்டும் என்றும், உண்மையானத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தலைமைப் பொறுப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நீதி நிறைந்த உலகை உருவாக்க முன்வர வேண்டும் என்றும், அனைத்துலக அரசர் கிறிஸ்துவிடம் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்