திருப்பீட மறைப்பணி கழகங்கள் இடர்துடைப்பு பணிக்கு உதவி
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு, நன்மனம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது, திருப்பீட மறைப்பணி கழகங்கள் அமைப்பு.
அண்மை மாதங்களில் இந்திய மாநிலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென, அவசரகால நிதியுதவிக்கு விண்ணப்பித்துவரும், PMS எனப்படும், திருப்பீட மறைப்பணி கழகங்கள் அமைப்பு, அவசரகால உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த திருப்பீட அமைப்பின் தலைவர் பேராயர் Giampietro Dal Toso அவர்கள் வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில், இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ள இயற்கைப் பேரிடர், இந்த நூற்றாண்டில் இடம்பெற்றுள்ள கடுமையான பேரிடர் என்றும், இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், திருஅவை கட்டடங்களை பழுதுபார்த்து சீரமைப்பதற்கு உலகினரின் உதவி தேவைப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி காலையில் தொடங்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 82 ஆயிரம் பேர், 471 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும் இடர்துடைப்பு பணிகளை ஆற்றி வருகின்றது.
கடந்த ஆகஸ்டில் கேரளாவில் இடம்பெற்ற வெள்ளத்தால், 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். குறைந்தது 28 இலட்சம் டாலர் பெறுமான சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் 57 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்