இளையோருக்கென முதுபெரும் தந்தையர்களின் கூட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஈராக்கின் பாக்தாத்தில் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் தலைமை இல்லத்தில், இவ்வாரம் இடம்பெறும் கீழை வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையர்களின் கூட்டம், இளையோருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் முதுபெரும் தந்தை கர்தினால் Louis Raphael Sako.
இத்திங்களன்று மாலை துவங்கிய இந்த 5 நாள் கூட்டத்தை, ‘மத்திய கிழக்கின் நம்பிக்கையின் அடையாளம் இளையோர்’, என்ற தலைப்புடன் அர்ப்பணிப்பதாக உரைத்த கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Louis Raphael Sako அவர்கள், இந்நாட்களில், இளையோருடன் சந்திப்பும், மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் குறித்த அறிக்கை வெளியீடும் இடம்பெறும் என அறிவித்தார்.
2010ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அல்கொய்தா அமைப்பால் 50 விசுவாசிகளும் இரு அருள்பணியாளர்களும் கொலைச் செய்யப்பட்ட, சகாய அன்னை பேராலயத்தில் இத்திங்களன்று மாலை சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, மூன்றாம் Ignace Youssif Younan அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியுடன் கீழை வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையர்களின் கூட்டம் துவங்கியது.
மாரனைட், காப்டிக், மெல்கித்திய, அர்மீனிய வழிபாட்டு முறைகளின் முதுபெரும் தந்தையர்களும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் பிரதிநிதியாக ஆயர் William Shomali அவர்களும், மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச்செயலர் பேராசிரியர் Souraya Bechealany அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்