தேடுதல்

தெரு விளக்கை ஏற்றுபவரைப்போல், உண்மைக் கிறிஸ்தவர்களும், தங்களை, வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர் தெரு விளக்கை ஏற்றுபவரைப்போல், உண்மைக் கிறிஸ்தவர்களும், தங்களை, வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர் 

பொதுக்காலம் 29ம் ஞாயிறு - மறைபரப்புப் பணி ஞாயிறு - ஞாயிறு சிந்தன

"தெரு விளக்கை ஏற்றுபவரைப்போல், உண்மைக் கிறிஸ்தவர்கள், தங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர்"

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

211018 ஞாயிறு சிந்தனை

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, ‘மிஷன் சண்டே’ (Mission Sunday), அதாவது, மறைபரப்புப்பணி நாளைச் சிறப்பிக்கின்றது. திருஅவை, ஆற்றிவரும் மறைபரப்புப் பணிகளுக்காக செபிக்கும்படி, விசுவாசிகளிடம் விண்ணப்பித்து, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1926ம் ஆண்டு, இந்நாளை உருவாக்கினார்.

அக்டோபர் 21, இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் 92வது மறைபரப்புப்பணி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியச் செய்தி, "Together with young people, let us bring the Gospel to all", அதாவது, "இளையோருடன் இணைந்து, நற்செய்தியை அனைவருக்கும் கொணர்வோமாக" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றுவரும் வேளையில் கொண்டாடப்படும் மறைபரப்புப்பணி நாளன்று, இளையோருடன் இணைந்து, நற்செய்தியை உலகெங்கும் கொண்டு சேர்க்க, திருத்தந்தை, நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மறைபரப்புப்பணி என்றதும், அது, குருக்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று எண்ணி, நம்மில் பலர் ஒதுங்கிவிடக்கூடும். ஆனால், இந்த நாளுக்கெனப் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Mission Sunday, அதாவது, “அனுப்பப்படும் ஞாயிறு” என்ற பதம், இந்த நாளைக் குறித்த பொருத்தமான எண்ணங்களை மனதில் விதைக்கிறது. மனிதராய் பிறந்த நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகில் ஒரு குறிப்பிட்ட பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை, இந்த நாள் நமக்கு நினைவுறுத்துகிறது.

"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. 'இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்பதே அச்செய்தி" என்று சொன்னவர், இந்திய மகாக்கவி இரவீந்திரநாத் தாகூர். நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகிற்கு, ஒரு பரிசாக, அன்புச் செய்தியைத் தாங்கிவரும் தூதராக, அனுப்பப்பட்டுள்ளோம். கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும், வார்த்தைகளால் அல்ல; மாறாக, நம் உண்மையான கிறிஸ்தவ வாழ்வால், மக்களுக்குக் கொண்டுசெல்ல, இவ்வுலகிற்கு நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதற்கு, ஜான் இரஸ்கின் (John Ruskin) அவர்கள் கூறும் உருவகம் அழகானது. தலைசிறந்த ஓர் எழுத்தாளராக, ஓவியராக, பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டவராக, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரஸ்கின் அவர்கள், ஒரு நாள், தன் நண்பருடன், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். பகலவன் மறைந்து, இருள் சூழ்ந்துவந்த நேரம் அது. அவரது வீட்டுக்குமுன் இருந்த ஒரு குன்றில், தெரு விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சுடர்விடத் துவங்கின. மின்சக்தி இல்லாத காலம் என்பதால், தெரு விளக்குகளை ஏற்றியபடி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் யார் என்று, இரஸ்கின் அவர்கள் வீட்டிலிருந்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் கையில் ஏந்திச் சென்ற விளக்கும், அவர் தெருவில் ஏற்றி வைத்த விளக்குகளும் இருளில் ஒளிர்ந்தன. அதைக் கண்ட ஜான் இரஸ்கின் அவர்கள், தன் நண்பரிடம், "தெரு விளக்கை ஏற்றும் அவர்தான், உண்மையான கிறிஸ்தவருக்கு எடுத்துக்காட்டு. அவர் யாரென்று நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் செல்லுமிடத்தையெல்லாம் ஒளிமயமாக மாற்றுகிறார். அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்களும், தங்களை, வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர்" என்று கூறினார். மறைபரப்புப்பணியை எவ்வாறு ஆற்றுவது என்பதற்கு, தெருவிளக்கை ஏற்றுபவர், சிறந்ததோர் உருவகம்.

தாங்கள் எங்கு சென்றாலும், ஒளி வட்டம் (spot light) தங்களை மட்டுமே சூழ்ந்திருக்க வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டிவிடும் இன்றைய உலகப் போக்கிற்கு முற்றிலும் மாறாக, தங்கள் மீது ஒளி வட்டம் விழாமல், அதே நேரம், மற்றவர்களுக்கு உதவி செய்யும்வண்ணம், விளக்குகளை ஏற்றியபடி, வாழ்க்கை வீதியைக் கடந்துசெல்வதே, கிறிஸ்தவர்களின் பணி என்று, ஜான் இரஸ்கின் போன்றோர் கூறியுள்ளனர். இதே எண்ணத்தை, இயேசுவும், தன் மலைப்பொழிவில் மற்றோர் உருவகத்தின் வழியே, அழகாகக் கூறியுள்ளார்:

மத்தேயு 5: 14-16

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்... எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக, விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

வீட்டில் ஏற்றிவைக்கப்படும் ஒளியை யாரும் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஒளியைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால், அது கண்களைப் பாதிக்கும், வலியை உருவாக்கும். அந்த ஒளியின் துணையோடு மற்ற பொருள்களைக் காண்பதற்கே ஒளி ஏற்றப்படுகிறது. தன்னை நோக்கி பிறரின் கவனத்தை ஈர்க்காமல், தன்னைச் சுற்றியிருப்பனவற்றை நோக்கி அவர்கள் கவனத்தை திருப்புவதுதான் ஒளியின் பணி.

ஒளியாக வாழ்வது, எளிதல்ல. இன்றைய நற்செய்தியில், இயேசு தன் சீடர்களிடம், தான் ஒரு தீபமாக, சிலுவை மரத்தில் ஒளிரப்போவதைப் பற்றி கூறுகிறார். ஆனால், அவரது சீடர்களில் இருவர், ஒளி தங்கள் மீது விழும்படி, தங்களை அரியணையில் அமர்த்துமாறு இயேசுவிடம் கேட்கின்றனர்.

இயேசுவின் எண்ணங்களும், சீடர்களின் எண்ணங்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் இயங்கின என்பதை, நற்செய்தியாளர் மாற்கு மும்முறை குறிப்பிட்டுள்ளார். தான் சந்திக்கப்போகும் துன்பங்களையும், மரணத்தையும் குறித்து இயேசு, தன் சீடர்களிடம், மும்முறை கூறுகிறார். முதல் முறை, அவர், தன் மரணத்தை முன்னறிவித்த வேளையில், பேதுரு அவரைத் தனியே அழைத்து கடிந்துகொண்டார் என்பதையும், அவரிடம் இயேசு, "என் கண் முன் நில்லாதே சாத்தானே!" (மாற்கு 8:33) என்று கூறியதையும், பொதுக்காலம் 24ம் ஞாயிறு நற்செய்தியில் கேட்டோம். (மாற்கு 8:27-35) இயேசு இரண்டாம் முறை தன் மரணத்தைக் குறித்து பேசியதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், யார் தங்களுக்குள் பெரியவர் என்ற விவாதத்தில் சீடர்கள் ஈடுபட்டனர் என்பதை, பொதுக்காலம் 25ம் ஞாயிறு நற்செய்தியில் கேட்டோம். (மாற்கு 9:30-37) இன்று, இயேசு மூன்றாம் முறையாக தன் நெருங்கிவரும் மரணத்தைக் குறித்து பேசியதைத் தொடர்ந்து, செபதேயுவின் மக்கள், யாக்கோபும், யோவானும், இயேசுவோடு, அரியணையில் ஏறும் வாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றனர். (மாற்கு 10:35-45)

சிலுவையைப் பற்றி இயேசு பேசியபோது, சிம்மாசனத்தைப் பற்றி இரு சீடர்கள் பேசினர். சிலுவை, சிம்மாசனம் இரண்டும் அரியணைகள். சிம்மாசனம் என்ற அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு.

இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த இரு சீடர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” (மாற்கு 10:38) என்று இயேசு கூறும் இச்சொற்கள், இன்றையத் தலைவர்கள் பலருக்குப் பொருத்தமான சொற்கள். அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும், தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், நம்மை, அதிர்ச்சியிலும், அவமானத்திலும், ஆழ்த்துகின்றன. இவர்கள் அறியாமல் செய்கிறார்களா, அல்லது மதியிழந்து செய்கிறார்களா, என்ற கேள்வியை எழுப்புகின்றன. மரியாதை, அதிகாரம் என்பனவற்றை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள், அறியாமையில் செய்கிறார்கள் என்று, இயேசு பெருந்தன்மையுடன் சொல்கிறார். இந்த அறியாமையின் உச்சக்கட்டமாக, இயேசுவை, இத்தலைவர்கள், சிலுவை என்ற அரியணையில் ஏற்றியபோது, மீண்டும் இயேசு, 'இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று தந்தையிடம் வேண்டியது, நம் நினைவுக்கு வருகிறது.

செபதேயுவின் மக்களான யாக்கோபும், யோவானும், இரு அரியணைகளில் அமர்வதற்கு விடுத்த இந்த விண்ணப்பம், மற்ற சீடர்களுக்குக் கோபத்தை மூட்டியது. பேராசை, பொறாமை, கோபம் என்ற இந்தச் சங்கிலித் தொடர் தன் சீடர்களைக் கட்டிப்போடும் ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்த இயேசு, உண்மையான மதிப்பு என்றால் என்ன, மரியாதை பெறுவது எவ்விதம், என்ற பாடங்களை அவர்களுக்குச் சொல்லித் தருகிறார். “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்” (மாற்கு 10:43-44) என்று இயேசு சொல்லித்தரும் பாடம், நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. இயேசுவின் இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு பணியாளர் தலைமைத்துவம் (Servant Leadership) என்ற கருத்து, தற்போது, மேலாண்மைப் பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது.

இயேசு சொல்லித்தந்த பணியாளர் தலைமைத்துவம் என்ற பாடத்தை வாழ்ந்துகாட்டியத் தலைவர்களை வரலாற்றில் சந்திக்கிறோம். ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களைப் பற்றி சொல்லப்படும் ஒரு கதை இது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரம். ஒரு நாள், அமெரிக்க அரசுத்தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், சாதாரண உடையணிந்து, தன் குதிரையில் ஏறிச்சென்றார். போகும் வழியில், ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் அவர்கள், தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி செய்தால், வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் அவர்கள், குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர் தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத்தலைவரைக் கூப்பிடுங்கள். வந்து உதவி செய்கிறேன்" என்று சொல்லி, தளபதியின் கையைக் குலுக்கினார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.

"பதவி என்பது, பணி செய்வதற்கே" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறியதை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும், சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த புனித அன்னை தெரேசா, ஒரு பெரிய தலைவரா? ஆம். கோடான கோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கும் தலைவர் அவர். அன்னை தெரேசாவைப்போலவே, அதிகாரம் என்பதற்குச் சரியான இலக்கணம் சொல்பவர்கள், ஜார்ஜ் வாஷிங்டனும், சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியரும். பணியாளர் தலைமைத்துவத்திற்கு இவர்களெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ஒளி வட்டங்களால் சூழப்பட்ட அரியணைகளில் அமர்ந்து, மரியாதை பெறுவதற்குப் பதில், உலக வீதிகளில் விளக்குகளை ஏற்றிவைக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம், அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை, இந்த மறைபரப்புப்பணி ஞாயிறு, அல்லது, அனுப்பப்படும் ஞாயிறன்று உணர்வோம்.

சிம்மாசனம், சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம். நாம் மட்டும் சுகம் காணலாம் என்று, அரியணை மீது ஏறி அமர்ந்தால், சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை மதிக்கமாட்டார்கள். கட்டாயம் நேசிக்க மாட்டார்கள். ஆனால், பலருக்கும் சுகம் தருவதற்கு, சிலுவை என்ற அரியணையில் ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ளமுடியும்.

சிம்மாசனமா? சிலுவையா? தெளிந்து தேர்ந்துகொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2018, 15:12