ஐக்கிய அரபு எமிரகத்தில் கத்தோலிக்க இளையோர் கூட்டம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாள்கள், ஐக்கிய அரபு எமிரகத்தின் Ras Al Khaimah நகரில் நடைபெறும் கத்தோலிக்க இளையோர் மாநாட்டில், 1000த்திற்கும் அதிகமான இளையோர் கலந்துகொள்ளவிருப்பதாக, ஃபீதேஸ் செய்தி கூறியுள்ளது.
2019ம் ஆண்டு சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" என்ற மையக்கருத்து, இந்த இளையோர் கூட்டத்தின் மையப்பொருளாகவும் அமைந்துள்ளது.
இளையோர் தங்கள் தனிப்பட்ட மாண்பையும், அழைத்தலையும் உணர்வதற்கு, அன்னை மரியா அவர்களுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்று தென் அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹிண்டர் அவர்கள் கூறியுள்ளார்.
Ras Al Khaimah நகரில் அமைந்துள்ள பதுவை நகர் புனித அந்தோனியார் கோவிலில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஐக்கிய அரபு எமிரகம், ஓமான், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் இளையோர் பங்கேற்கின்றனர்.
2009ம் ஆண்டு துபாய் நகரிலும், 2012ம் ஆண்டு அபு தாபியிலும் நடைபெற்ற இளையோர் கூட்டங்களைத் தொடர்ந்து, இவ்வாண்டு Ras Al Khaimah நகரில் இக்கூட்டம் நடைபெறுகிறது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்