காது கேளாதவரை இயேசு குணமாக்கும் நிகழ்வு - மாற்கு 7,31-37 காது கேளாதவரை இயேசு குணமாக்கும் நிகழ்வு - மாற்கு 7,31-37 

பொதுக்காலம் 23ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

துன்பம், நோய், வறுமை ஆகியவற்றைக் குறித்த கேள்விகள், மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவந்துள்ளன. இக்கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

090918 ஞாயிறு சிந்தனை

ஆரோக்கிய அன்னையின் விழாவைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கின்றன. தவிர்க்கமுடியாத உண்மைகளாக இவ்வுலகில் நிலவும், நோய், வறுமை, துன்பம் ஆகியவற்றைக் குறித்து நம் கண்ணோட்டம் என்ன? நோயுற்றோரையும், வறியோரையும் குறித்து நம் எண்ணங்கள் என்ன? அவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? என்ற ஓர் ஆன்மீக ஆய்வை மேற்கொள்வது, பயனுள்ள ஒரு முயற்சி.

நோய், வறுமை இவற்றைப்பற்றி இஸ்ரயேல் மதத்தலைவர்கள், தவறான எண்ணங்கள் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தவரை, நோயும் வறுமையும், பாவத்தின் தண்டனைகள். நோயுற்றோரும், வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதே இறைவனின் விருப்பம் என்ற தவறான எண்ணங்களை, மதத்தலைவர்கள், மக்கள் மீது திணித்துவந்தனர்.

நாம் வாழும் இன்றைய சமுதாயத்திலும், சாதி, அல்லது, இன அடிப்படையில் தவறான, முற்சார்பு எண்ணங்கள், புரையோடிப் போயிருப்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்த சமுதாய நோயை நம்மிடமிருந்து இறைவன் அகற்றவேண்டும் என்று மனமுருகி வேண்டுவோம்.

துன்பம், நோய், வறுமை ஆகியவற்றைக் குறித்த கேள்விகள், மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவந்துள்ளன. இக்கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன. முதல் வாசகத்தில் ஒலிக்கும் இறைவாக்கினர் எசயாவின் வார்த்தைகளில், வெறும் வேதனை மட்டும் வெளிப்படவில்லை; மாறாக, அந்த ஆழமான வேதனையிலும், இறைவனிடம் கொண்ட விசுவாசம், அவருடைய வார்த்தைகளில் வெளிச்சமாகிறது.

புல்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கவிதை, அழிவின் நடுவிலும் ஆழ்ந்த நம்பிக்கையோடு வாழமுடியும் என்பதை வலியுறுத்துகிறது. இக்கவிதையின் உரைநடை சுருக்கம் இதோ...

அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "தைரியம்னா என்னாண்ணே?" என்று தம்பி அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி, தைரியத்தை விளக்கப்பார்த்தான் அண்ணன். தம்பிக்கு விளங்கவில்லை.

அவர்கள் நடந்து சென்ற வீதியின் ஓரத்தில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன், தம்பியிடம், அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான்.

கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்தக் காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில், கலந்து, மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம். அதையே, நாம், நம்பிக்கையின் அடையாளமாகவும் எண்ணிப்பார்க்கலாம். இத்தகைய நம்பிக்கையை, நாம் இறைவாக்கினர் எசயாவின் சொற்களில் உணர்கிறோம்.

எசாயா 35: 4-7

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

எசாயாவின் சொற்களைக் கேட்கும்போது, இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழுகிறது. அதுவும், இன்றையச் சூழலில், மனிதகுலம் இயற்கையை அழித்துவரும் வேகத்தைக் காணும்போது, கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் என்று சொல்வதற்குப் பதில், நீர்த் தடாகம், கனல் கக்கும் மணல்பரப்பு ஆகும் என்று மாற்றிச்சொல்லத் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசாயா கண்ட அந்த விசுவாசக் கனவு நமதாக வேண்டுமென, இறைவனை இறைஞ்சுவோம்.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், வறியோரை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? என்ற கேள்விகளுக்கு மிகவும் தெளிவான பாடங்களைச் சொல்லித் தருகின்றது.

பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான்; மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு, உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர், ஏழைகளை மரியாதையுடன் நடத்துகிறோம்? இதுதான், திருத்தூதர் யாக்கோபு, நம்மிடம் எழுப்பும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர், கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பிவந்த யூதர்கள் மத்தியில், இயேசு, "வறியோர் பேறு பெற்றோர்" என்று தன் மலைப்பொழிவில் சொன்னார். இயேசு இவ்வாறு சொன்னது, யூத மதத் தலைவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்; தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில், நம்பிக்கை பிறந்திருக்கும்.

புரட்சிகரமாகப் பேசி, மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று இயேசு முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவற்றை மக்களுக்குச் சொன்னார். அதையே வாழ்ந்தும் காட்டினார். இன்றைய நற்செய்தியில்,  மீண்டும் ஒருமுறை, இயேசு தன்  சொல்லாலும்,செயலாலும் பல பாடங்களைப் புகட்ட வருகிறார்.

மாற்கு நற்செய்தி 7: 32

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதர் தானாகவே இயேசுவைத் தேடிவரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை ஒரு பாவி என்றும், கடவுளின் தண்டனையை அனுபவிப்பவர் என்றும், முத்திரை குத்திய யூத மதத் தலைவர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும், அத்தலைவர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, அவர் தயங்கியிருக்க வேண்டும்.

தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளை எழுப்பி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர், இந்த நோயாளி. அவருடைய ஒரு சில நண்பர்கள், அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டுவந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலிலேயே முடங்கிப்போன ஒருவரை, அவரது நண்பர்கள் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை (லூக்கா 5: 18-25) இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து, அவருடைய நண்பர்கள், அவரை, இயேசுவுக்கு முன் கிடத்தினர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார் என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். (லூக்கா 5: 20)

நோயுற்றோரை குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை நோயாளிகள் பெறுவதே, ஓர் அற்புதம்தான். தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில் நிகழ்ந்த ஓர் அற்புதம் இது.

போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஓர் இளைஞனை, அவரது நண்பர், தினமும், சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவார். அவர்களுக்கு வகுப்புகள் நடந்த கட்டடத்தில் ‘லிப்ட்’ வசதி இல்லாததால், கால் ஊனமுற்றவறை ஒரு குழந்தையைப்போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு, அவரது நண்பன், இரண்டு மாடிகள் ஏறுவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

காது கேளாத மனிதரை, இயேசுவிடம், அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. இயேசு விரும்பியிருந்தால், ஒரு சொல் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு அவரது காதுகளில் விரல்களை வைத்தது, உமிழ்நீரால் அவரது நாவைத் தொட்டது, 'திறக்கப்படு' என்ற கட்டளையிட்டது... என்ற அனைத்து செயல்களும், நோயுற்ற அந்த மனிதரை முழுமையாகக் குணமாக்கின. ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய அற்புதங்களை நாம் அறிவோம்.

2 மாதக் குழந்தையொன்று, தன் தாயின் குரலை முதல் முறையாகக் கேட்கும்போது, அக்குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகையும், அழுகையும் அழகான ஒரு 'வீடியோ' பதிவாக, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஒரு நிமிட 'வீடியோ'வை, 1 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். கிறிஸ்டி (Christie Keane) என்ற இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை சார்லட் (Charlotte), பிறவியிலேயே கேட்கும் திறனின்றி பிறந்தாள். இரண்டு மாதங்கள் சென்று கேட்கும் கருவியொன்று, குழந்தையின் காதில் பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தை சார்லட், தன் தாயின் குரலை முதல் முறை கேட்டு, கண்களில் கண்ணீரோடு சிரிக்கும் அந்த வீடியோ, காண்போரின் உள்ளத்தைத் தொடுகிறது. குழந்தையின் இதயத்தில் அன்பு அதிர்வுகளை உருவாக்க, தாயின் குரல் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை, இந்த வீடியோ, மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது.

கேட்கும் திறனின்றி பிறந்த குழந்தை சார்லட், முதல் இரு மாதங்கள், பசி வந்த வேளையில் அழுதாள்; மற்ற நேரங்களில், வேறு எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தாள் என்று, இளம்தாய் கிறிஸ்டி கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப்பின், கேட்கும் கருவி பொருத்தப்பட்டு, தாயின் குரலைக் கேட்ட அன்றுதான், தன் குழந்தையின் முகத்தில் புன்சிரிப்பையும், இன்னும் சில உணர்வுகளையும் காணமுடிந்தது என்று, கிறிஸ்டி அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தவண்ணம் கூறினார்.

தாய் சேய் உறவைச் சித்திரிக்கும் இந்த உணர்வுப்பூர்வமான வீடியோவைக் காணும்போது, ஆதரவின்றி விடப்படும், ஆயிரமாயிரம் குழந்தைகள், நினைவுக்கு வருகின்றனர். கேட்கும், பார்க்கும், பேசும் திறன்கள் இல்லாமல் பிறக்கும் பல்லாயிரம் குழந்தைகள், யாருமற்ற அனாதைகளாக விடப்படும் கொடுமை, இன்றும் நம்மிடையே காணப்படுகிறது. இவர்களை, இறைவனின் சந்நிதியில் இன்று சிறப்பாக நினைவில் கொள்வோம்.

தாய்க்குரிய பரிவோடு, இயேசு, காதுகேளாதவரைக் குணமாக்கும் நிகழ்வு, நமக்கு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசுவின் 'திறக்கப்படு' என்ற கட்டளை, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்கிறது.

வறுமை, நோய் ஆகிய சிறைகளில் நாம் சிக்கியிருக்கும்போதும், இச்சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், இறைவாக்கினர் எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நிஜமாக்குவோம். முடியாது என்ற அவநம்பிக்கை, நம்மைச் சிறைப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால்,  பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.... காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இத்தகைய நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள, இறைமகனும், ஆரோக்கிய அன்னையும் நமக்குத் துணை புரிவார்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 14:47