தேடுதல்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறினார் - யோவான் 6 “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறினார் - யோவான் 6 

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 19ம் ஞாயிறு சிந்தனை

சென்ற வார ஞாயிறு சிந்தனையில் நாம் எண்ணிப்பார்த்த ஒரு குறும்படத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இரு சிறுத்தைகளும், ஒரு மானும் இணைந்து விளையாடும் அழகை, அந்தப் படம் வெளிக்கொணர்ந்தது. அந்த குறும்படத்தின் இறுதியில் திரையில் தோன்றும் சொற்கள், இன்றைய நம் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கின்றன. "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.

பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், காரணம் ஏதுமின்றி வெடிக்கும் வன்முறைகளால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் அடிக்கடி தள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப்பாட்டி சொல்லிச் சென்றார். மானம், குலப்பெருமை, கற்ற கல்வி, அழகிய தோற்றம், பகுத்தறிந்து பார்க்கும் அறிவு, தானம் செய்வதால் வரும் புகழ், தவம் மேற்கொள்ளும் ஆற்றல், முன்னேற்றம், விடாமுயற்சி, பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்து பண்புகளும், பசியால் வாடும் ஒருவரிடமிருந்து ஓடிவிடும் என்பதை 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் பட்டியலிட்டுள்ளார், ஔவைப்பாட்டி.

அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதையும் அறிவையும் வாட்டும் வேறு பல பசிகளை, தீர்க்கும் வழியறியாது தவிக்கும்போது, வன்முறை என்ற வழியை தெரிவு செய்கிறோம்.

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக:

பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவை உருவாக்கும் வெறிகளும் வெளிப்படுகின்றன.

இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் –பசியில் - இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.

தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற பொய் தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போரிடம், அத்தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொன்ன மனிதர்களை, அவர்கள், தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.

தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்', கூடங்குளம், 'டாஸ்மாக்' என்ற பல அரக்கர்களை வழிபட்டு வரும் அரசுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், நம் நினைவுகளை கீறுகின்றன. இந்தப் போராட்டங்களில் உயிர் துறந்த தியாக உள்ளங்கள் இறைவனின் அமைதியில் இணையவேண்டும் என்றும், இவர்கள், தொடர்ந்து, மக்களின் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது. வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர, இறைவனின் மலையை அடைந்தார் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது.

பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர் மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:

யோவான் நற்செய்தி 6: 41-51

அக்காலத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும் இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள், அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களைப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசிகொண்ட சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப் பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில் நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.

மக்கள் பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய கசப்பு மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் இறங்கினர்.

உண்மையைக் கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் மற்றொரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது பிறப்பைக் குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு, மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது  ஞாயிறு வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... கடந்த வாரம், ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு தேதிகளைக் கடந்துவந்தபோது, உலகின் கவனம் மீண்டும் ஜப்பானை நோக்கித் திரும்பியது. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது, 1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமானோர், பல்வேறு நோய்களால் துன்புற்று இறந்துள்ளனர்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று  கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.

சடக்கோவின் தோழிகள் அவரிடம் ஜப்பானில் நிலவும் ஒரு புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்த வேளையில் இறந்தார். அவர் இறந்ததும், அவரது தோழிகள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.

சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசையும் அவர் மனதில் இருந்திருக்கும் என்று நம்பலாம்.

இன்றளவும், சிறு குழந்தைகள், காகித நாரைகளை செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன், குழந்தைகள் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் கடமை.

2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால், அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களின் 70ம் ஆண்டு நினைவை தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார். அவ்வேளையில் அவர் கூறிய சொற்களுடன் இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

"ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டது, ஓர் அடையாளமாக விளங்குகிறது. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்தும்போது, மனிதர்களிடம் வெளிப்படும் அழிவு சக்திக்கு ஓர் அடையாளமாக இந்நிகழ்வு விளங்குகிறது" என்று தன் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இறுதியில், "போரை வெல்வதற்கு ஒரே வழி, போரை நிறுத்துவது" என்று அழுத்தந்திருத்தமாக கூறி முடித்தார்.

போரற்ற, வன்முறையற்ற பூமி உருவாகவேண்டும்; போர்க்கருவிகளை, அணு ஆயுதங்களை உருவாக்கி, வர்த்தகம் செய்யும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும்; என்ற நமது ஆவல், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல்,  உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 15:14