கந்தமால் மறைசாட்சிகளின் 10ம் ஆண்டு நினைவு
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக கடும் வன்முறைகள் இடம்பெற்ற பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வில், உண்மையான மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் அமைதிக்காகச் செபிப்பதற்கு விரும்புவதாக, ஒடிசா மாநில தலத்திருஅவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்நினைவு நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவில் நடந்தவை, இனிமேல் ஒருபோதுமே இடம்பெறவே கூடாது என்றும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நள்ளிரவில் அப்பாவி பொது க்கள்மீது நடத்தப்பட்ட மனிதமற்ற தாக்குதல்களை மிகுந்த வேதனைகளோடு நினைவுகூர்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், நிறம் ஆகிய வேறுபாடுகளின்றி, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக ஒடிசா மாநில அரசு தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ள, பேராயர் பார்வா அவர்கள், இன்னும் நிவாரண உதவிகளுக்காகக் காத்திருக்கும் மக்களின் தேவைகள் முற்றிலும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய வன்முறையில், ஏறத்தாழ நூறு பேர் இறந்தனர், 56 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர், ஆயிரக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஆலயங்களும், திருஅவை நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. (CBCI)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்