ஜிம்பாபுவேயை குணமாக்க வேண்டியது திருஅவை
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
ஜிம்பாபுவே நாட்டில் பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையில் ஆறுபேர் இறந்துள்ளவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை சீர்படுத்த வேண்டியது திருஅவையின் கடமை என, அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜிம்பாபுவே தேர்தலுக்குப்பின் நாட்டின் நிலைமை பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, சிறந்த கல்வியாளரான, இயேசு சபை அருள்பணி ஜோ அரிமோசோ அவர்கள், துண்டுபட்டுள்ள நாட்டை ஒன்றாக இணைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு திருஅவைக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
தற்போது பதவியில் இருக்கும் அரசுத்தலைவர் Emmerson Mnangagwa அவர்கள், பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளவேளை, இவரின் தேர்தல் வெற்றி குறித்து எதிர்க்கட்சியில் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
தேர்தல் வெற்றி சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கும் என்பது தெரிந்துள்ளவேளை, குடிமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்த வேண்டியது திருஅவையின் பொறுப்பு எனவும், தேசிய அளவில் ஆரம்பிக்கப்படும் அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள், தங்களின் வருங்காலத்தை வடிவமைக்க, வருங்காலத் தலைமுறைகளுக்கு உதவும் எனவும், அருள்பணி அரிமோசோ அவர்கள் கூறினார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்