18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆகஸ்ட் 18, இச்சனிக்கிழமையன்று 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளவேளை, இந்த நிகழ்வுக்கு கத்தோலிக்கர் தங்களின் உறுதியான ஆதரவை வழங்குமாறு, அந்நாட்டின் பேராயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் ஜகார்த்தா மற்றும், தென் சுமத்திரா மாநிலத்தின் பலேம்பாங் மாநகரங்களின் பேராயர்கள் Ignatius Suharyo Hardjoatmodjo, Aloysius Sudarso ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில், விருந்தினர்களை உபசரிப்பதில் கத்தோலிக்கர் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் விளங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒற்றுமையின் செய்தியை வெளிப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் எனவும், இரு கொரிய நாடுகளுக்கும் இடையே உரையாடலை உறுதிப்படுத்த, இது நல்ல வாய்ப்பு எனவும், பேராயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கியுள்ள இவ்விளையாட்டுப் போட்டிகள், வருகிற செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். இதற்கு, 35 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டுகளுக்குத் தயாரிப்பாக, ஏறக்குறைய 16 மாதங்கள் உள்கட்டமைப்பு பணிகள் (461 மில்லியன் யூரோக்கள் செலவில்) நடைபெற்றன. மேலும், 45 நாடுகளிலிருந்து 11 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்