தேடுதல்

கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் கூட்டத்தின் நிறைவு கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் கூட்டத்தின் நிறைவு 

கிழக்கு ஆப்ரிக்க ஆயர்களின் திறந்த மடல்

குடும்பங்கள், இளையோர், சிறார், புலம்பெயர்ந்தோர், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 13 முதல் 23 வரை தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திய ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதி ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள், 21 தலைப்புக்களுடன் தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எரிட்ரியா, எத்தியோப்பியா, மலாவி, கென்யா, டன்சானியா, சூடான், தென் சூடான், உகாண்டா, ஸாம்பியா, ஜிபூட்டி மற்றும் சொமாலியாவைச் சேர்ந்த ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள் இணைந்து 'கிழக்கு ஆப்ரிக்காவில் உயிரோட்டமுடைய பன்முகத் தன்மை, சரிநிகர் மாண்பு, கடவுளில் அமைதியான ஒன்றிப்பு' என்ற தலைப்பில் நடத்திய 11 நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், குடும்பங்கள், இளையோர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் குறித்து அதிகம் அதிகமாக வலியுறுத்தியுள்ளன.

எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியாவுக்கு இடையே நிலவிவந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்து, தற்போது அமைதி குறித்த நம்பிக்கை ஒளி தெரிவது குறித்தும் தங்கள் மகிழ்ச்சியை அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள ஆயர்கள், தென் சூடானில் அமைதி விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.

குடும்பங்கள், இளையோர், ஒன்றிணைந்த சுற்றுச்சூழல், புலம்பெயர்ந்தோர், சிறார் பாதுகாப்பு போன்றவை குறித்தும் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ள AMECEA என்ற இந்த கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் அமைப்பு,  அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கான நல ஆதரவு அமைப்புமுறை உருவாக்கம், கத்தோலிக்க கல்வி நிலையங்களின் நிலை, கத்தோலிக்க நிறுவனங்களை பொறுப்புடன் நிர்வகித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மை, சமூகத்தில் காணப்படும் இலஞ்ச ஊழல், புதிய நற்செய்தி அறிவித்தலின் தேவை ஆகியவை குறித்து தன் கருத்துக்களை தெரிவித்துள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2018, 16:19