வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருஅவை உதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
மகராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், குஜராத், அசாம், கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் பெய்துவரும் கன பருவமழையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளவேளை, இதில் பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ இருபது இலட்சம் பேருக்கு குடி நீர், உணவு மற்றும் நலவாழ்வுக்குத் தேவையான அவசரகால உதவிகளை ஆற்றி வருகிறது, இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
அசாம் மாநிலத்தில் 3,700 குடும்பங்களுக்கு குடி நீரையும், 1,400 குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள், கொசு வலைகள், இன்னும், அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளது காரித்தாஸ்.
கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், சமய வேறுபாடின்றி, வெள்ள நிவாரணமாக, முப்பது இலட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளது காரித்தாஸ் அமைப்பு. மேலும், கேரளாவின் 32 கத்தோலிக்க மறைமாவட்டங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன மற்றும் குறைந்தது ஒரு இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்