மனித வர்த்தகத்திற்கெதிரான நடவடிக்கைகள்....
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
அடிமைமுறையின் நவீன வடிவங்கள், இகழத்தக்க அளவில் பரவி, வார்த்தைகளால் சொல்லமுடியாத மனிதத் துன்பங்களுக்குக் காரணமாகியுள்ளன என்று, அர்ஜென்டீனா ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜூலை 30, வருகிற திங்களன்று மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, “அடிமைமுறையின் புதிய முகம்” என்ற தலைப்பில், அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
தங்களைப் பாதுகாக்கச் சிறிதளவே வசதியுள்ளவர்கள் மற்றும் வருங்காலம் பற்றி நம்பிக்கையிழந்த மக்களை, திட்டமிட்ட குற்ற அமைப்புகள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அந்தப் பணிக்குழு, இந்த அமைப்புகளின் நோக்கங்களையும் விவரித்துள்ளது.
பாலியல் தொழில், அடிமைவேலை, மனித உறுப்புகள் வர்த்தகம் மற்றும் சில காரணங்களுக்காக, அப்பாவி மக்கள் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், புகலிடம் தேடும் புலம்பெயர்ந்தவர்களே, இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அர்ஜென்டீனாவின் அந்தப் பணிக்குழு எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்